பத்மஸ்ரீ பாப்பம்மாள்
பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள் பிறந்தது மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேவனாபுரம் கிராமம். 1915ல், மருதாசல முதலியார்-வேலம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். பாட்டியின் ஆதரவில் தேக்கம்பட்டியில் வளர்ந்தார். பாட்டி கண்டிப்புடனும் அக்கறையுடனும் வளர்த்தார். சிறு வயதிலேயே வீட்டுவேலை, விவசாயம், பாட்டி நடத்தி வந்த மளிகைக் கடைத் தொழில் என அனைத்திலும் அனுபவம் பெற்றார். இருபது வயதில் ராமசாமியுடன் திருமணம் நிகழ்ந்தது. ஏற்கனவே மளிகைக்கடை நடத்திவந்த பாப்பம்மாள், கணவருடன் இணைந்து சிறிய மெஸ் ஒன்றைத் திறந்தார். அந்த வருமானத்தை அப்படியே சேமித்து வைத்தார். அவர்களுக்கு வாரிசு இல்லை என்பதால் வேறு செலவும் இல்லை. சிக்கனமான வாழ்க்கையில் பெருகிய சேமிப்புப் பணத்தைக் கொண்டு கொஞ்சம் நிலம் வாங்கினார். அதில் விவசாயம் செய்தார். சிறுகச் சிறுகச் சேமித்து மேலும் நிலம் வாங்கினார்.

பத்து ஏக்கர் நிலம் கைவசம் வந்தது. விவசாய நுணுக்கங்களைக் கற்பதற்காக தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். பின்னர் இதே பல்கலைக்கழகத்தின் விவாதக்குழு அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்தார். விவசாயம் கை கொடுத்தது. வாழ்க்கையையும் உயர்த்தியது.

தொடர்ந்து சமூகப் பணியிலும் ஈடுபட்டார் பாப்பம்மாள். அரசியல் ஆர்வத்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 1959ம் ஆண்டில் தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964ம் ஆண்டில் யூனியன் கவுன்சிலராகவும் பதவி வகித்தார். அப்பகுதி மாதா் சங்கத் தலைவியாகவும் பொறுப்பு வகித்ததுண்டு.

பாப்பம்மாளிடம் ஆசி பெறும் பிரதமர் மோடி



1992ல் கணவா் ராமசாமி காலமானார். முதுமை காரணமாக விவசாய நிலங்களைச் சரிவரப் பராமாரிக்க முடியாததால் அவற்றின் ஒரு பகுதியை விற்றுவிட்டார் எஞ்சிய சுமார் 2.5 ஏக்கர் நிலத்தைத் தன்வசம் வைத்துள்ள அவர், இந்தத் தள்ளாத 106 வயதிலும் சளைக்காமல் அதில் விவசாயம் பார்த்து வருகிறார். விடியற்காலையில் எழுந்து வயலுக்குச் சென்று இயன்ற வேலைகளைச் செய்கிறார். அதுவும் இயற்கை விவசாயம். இதுவரையிலான வாழ்க்கையில் பாப்பம்மாளுக்கு சலிப்போ, அலுப்போ, புகாரோ ஏதுமில்லை.

அவரது அயராத உழைப்பிற்குப் பரிசாக மத்திய அரசு, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது அளித்து பெருமைப்படுத்தியது. சமீபத்தில் கோவைக்கு வந்திருந்த பாரதப் பிரதமர் மோடி, பாப்பம்மாளிடம் தலை வணங்கி ஆசி பெற்றார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.


ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com