பஞ்சம் பூரி
தேவையான பொருட்கள்
உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 1 கிண்ணம்
மிளகாய்வற்றல் - 6 (அ) 7
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
நெய் - 3 தேக்கரண்டி
கோதுமை மாவு - 2 கிண்ணம்

செய்முறை
நெய் விட்டுப் பருப்புகளைத் தனித்தனியே வறுக்கவும். மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து எல்லாவற்றையும் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். உப்பு போட்டுக் கொள்ளவும். கோதுமை மாவை ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, சிட்டிகை உப்பு போட்டுப் பிசையவும். எண்ணெயை வாணலியில் விட்டு, துளி நெய் விடவும். மாவைச் சிறு சிறு பூரிகளாக இடவும். ஒரு பூரியின்மேல் பொடியைப் பரப்பி, இன்னொரு பூரியை மேலே வைத்து, சுற்றிலும் லேசாக மடித்து, பூரணம் வெளியில் வராமல் ஒட்டவும். எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதுவே பஞ்சம் பூரி.

பிக்னிக்கில் திரும்பத் திரும்ப தயிர் சாதம், புளி சாதம் எடுத்துப்போய் போரடிக்காமல் இது புதுமாதிரி தின்பண்டம். தொட்டுக்கொள்ள சாஸ், உருளை சப்ஜி நன்றாக இருக்கும். வட இந்தியர்களுக்கு இது ஸ்பெஷல் சுற்றுலா உணவு. இரண்டு மூன்று நாட்களுக்கு வீணாகப் போகாது. பூரணத்தைச் செய்து வைத்துக்கொண்டு விட்டால், கிளம்பும்போது பூரி செய்து கொள்ளலாம். சுலபம்... சுவை!

தங்கம் ராமசாமி,
நியூ ஜெர்ஸி

© TamilOnline.com