ஏ.எல். ராகவன்
"எங்கிருந்தாலும் வாழ்க", "புத்திசிகாமணி பெற்ற பிள்ளை", "அன்று ஊமைப் பெண்ணல்லோ", "சீட்டுக்கட்டு ராஜா" போன்ற மனங்கவர்ந்த பாடல்களைப் பாடிய ஏ.எல். ராகவன் (87) காலமானார். அய்யம்பேட்டை லட்சுமணன் ராகவன் இயற்பெயர். நாடக உலகில் வாழ்க்கையைத் தொடங்கினார். பிரபல பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். பலவிதமான முகபாவங்களைக் காட்டும் திறமையும், இனிய குரலும் இருந்ததால் 'ஸ்த்ரீ பார்ட்' நடிக்கும் வாய்ப்பு வந்தது. பெண்வேடத்தில், பெண்குரலில் பேசி, பாடி அசத்தினார். நாடகங்கள் நலிவுறத் தொடங்கிய காலத்தில், திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். 1947ம் ஆண்டு 'கிருஷ்ண விஜயம்' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பி.யூ. சின்னப்பா நடித்த 'சுதர்ஸன்' படத்தில் கண்ணனாக நடித்தார். 1950ம் ஆண்டு வெளியான 'விஜயகுமாரி' திரைப்படத்தில் குமாரி கமலாவுக்காகப் பெண் குரலில் பாடி, பாடகராகத் திரையுலகிற்கு அறிமுகமானார்

பெண் குரலில் பாடியே பழக்கம் பெற்றிருந்த இவர், பின்னர் ஆண்குரலிலும் பாடினார். இவரது வித்தியாசமான குரல் எம்.எஸ்.வி.யைக் கவர்ந்தது. 'புதையல்' படத்தில் வாய்ப்பளித்தார். சந்திரபாபுவுடன் இணைந்து "ஹலோ மை டியர் ராமி" என்ற பாடல்தான் இவர் ஆண்குரலில் பாடிய முதல் பாடல். தொடர்ந்து 'அடுத்த வீட்டுப் பெண்' படத்தில் இவர் பாடிய "தக்கார் நிறைந்த சங்கமிது" என்ற பாடல் பிரபலமானது.

நகைச்சுவைப் பாடல்களுக்கும், கிண்டல் பாடல்களுக்கும் இவரது குரல் பொருத்தமாக இருப்பதாகக் கருதிய இசையமைப்பாளர்கள் தொடர்ந்து வாய்ப்பளித்தனர். ஏ.எல். ராகவன் நாடறிந்த பாடகரானார். நாகேஷிற்கு அதிகம் பின்னணி பாடினார். நடிகை எம்.என். ராஜத்தை மணம் செய்துகொண்டார். "கண்ணில் தெரியும் கதைகள்" போன்ற சில படங்களைத் தயாரித்து, அவற்றில் கைப்பணத்தை இழந்தார். ஆயினும் மனம் சோராமல் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்தார். சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். முதுமை காரணமாகக் காலமானார்.

ஏ.எல். ராகவனுக்குத் தென்றலின் அஞ்சலி.

© TamilOnline.com