குழந்தைகள் எழுத்தாளர் உமா கிருஷ்ணசுவாமியுடன் சந்திப்பு
ஏப்ரல் 30-ம் தேதி மாலை 5 மணி.

De Anza கல்லூரி அரங்கத்தில் பெற்றோரும், குழந்தைகளுமாகத் திரளுகிறார்கள். அனைவருக்கும் தென்றல் (ஏப்ரல், 2005) மூலம் அறிமுகமான குழந்தைகள் எழுத்தாளர் உமா கிருஷ்ணசுவாமியை நேரில் சந்திக்கும் எதிர்பார்ப்பு. Breeze Foundation-ம், தென்றல் பத்திரிகையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது.

ஒரு அனுபவமிக்க எழுத்தாளரிடமிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அந்த எதிர்பார்ப்புடன்தான் நானும் உமா கிருஷ்ணசுவாமியின் கதை நேரத்திற்குச் சென்றிருந்தேன். அது ஓர் அருமையான நிகழ்ச்சி. நீங்கள் அங்கு வந்திருந்தால் அவரது சில அருமையான புத்தகங்களைப் பார்த்திருப்பீர்கள். அவரது புத்தகங்கள் சிலதும் அன்று விலைக்குக் கிடைத்தன - உமா கிருஷ்ணசுவாமியின் கையெழுத்துடன்! எப்படிச் சிறந்த எழுத்தாளராவது என்பது பற்றி அவர் அறிவுரை வழங்கினார் (அவை சிறுவர், சிறுமியருக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் உதவும்!)

உமா கிருஷ்ணசுவாமி தான் எழுதிய புத்தகங்களைப் பற்றியும் தனது எழுத்து அனுபவங்களைப் பற்றியும் பேசினார். அவரது புத்தகங்களில் சில இந்தியப் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை, மற்றும் சில அவரது சொந்தக் கற்பனையில் உருவானவை.

இளம் எழுத்தாளர்களுக்கு அவரது அறிவுரை: தொடர்ந்து எழுதுங்கள்!

அவரது புத்தகங்கள் அருமையான கற்பனைகளும், வர்ணனைகளும் கொண்டவையாக இருக்கின்றன. The Broken Tusk என்ற புத்தகத்தில் அவர் தனது வர்ணனை களையும், கற்பனைகளையும் சேர்த்துப் பிள்ளையார் கதைகளை அருமையாகச் சொல்லியிருக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து அவர் ஒரு கதையைப் படித்துக் காட்டினார். கதையில் வரும் பாத்திரங்களாகவே மாறி, குரலை மாற்றி அவர் படித்த விதம் அருமை! பிள்ளையார் எப்படிச் சாப்பிட்டார் என்று அவர் விவரிக்கும் போது மற்ற குழந்தைகளும் அவருடன் சேர்ந்து கொண்டது அவரது கதைகள் எப்படி எல்லோரையும் ஈர்க்கின்றன என்பதற்குச் சான்று. இந்தப் புத்தகம் இப்போது பதிப்பில் இல்லை. அதற்காகக் கவலைப்பட வேண்டாம்-எல்லா நூலகங்களிலும் இவரது அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கின்றன.

அவரது முதல் புத்தகம் Stories of the Flood; சமீபத்திய புத்தகம் Naming Maya. அவர் விவரித்த விதத்திலிருந்து அந்தப் புத்தகம் மிகவும் அருமையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருடனும் அவர் கலந்துரையாடினார். சிறந்த எழுத்தாளர் ஆவதற்கு அவர் கொடுத்த சில அறிவுரைகள்:

நிறைய எழுதுங்கள்; அடிக்கடி எழுதுங்கள்

ஒரு நோட்டுப் புத்தகத்தில் கதைகளை எழுதி வாருங்கள் (அவர் தனது நோட்டுப் புத்தகத்திலிருந்து அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டார்.)

உங்களுக்குத் தோன்றும் கதைக் கருக்களை நோட்டுப் புத்தகத்தில் குறித்து வையுங்கள்; வர்ணனைகளை எழுதி வாருங்கள்.

எல்லாக் கருக்களும் சிறந்த கதையாக உருவாகாது. ஆனால் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை அசை போடப் போடத்தான் சிறந்த கதைகளை உருவாக்க முடியும்.

உங்கள் சொந்த அனுபவங்களை எழுதுங்கள்; எழுத எழுத உங்கள் திறமை மெருகேறும்.

நிறையப் படியுங்கள் - அது உங்களுக்கு எழுத உதவும்.

நம்மைப் போன்ற சிறுவர்கள் எழுதும் கதைகளைப் பதிப்பிக்க பல ஆங்கிலப் பத்திரிகைகள் உள்ளன. அவர் Skipping Stones என்ற பத்திரிகைக்கு எழுதச் சொல்லி ஊக்கம் கொடுத்தார். (தமிழில் எழுதினால் தென்றலுக்கு அனுப்பலாம்!)

அவரைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய: www.umakrishnaswami.com

கேள்வி கேட்க ஊக்குவிக்கும் முறையில் கேள்வி கேட்ட அனைவருக்கும் ஒரு லாலி பாப் வழங்கியது பாராட்டப் பட வேண்டியது (எனக்கும் ஒன்று கிடைத்ததல்லவா!). இது போன்ற சிறந்த நிகழ்ச்சிகளை Breeze Foundation மேலும் தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆங்கிலத்தில்: ஆரபி சேஷப்பன், வயது 11
தமிழாக்கம்: சிவா சேஷப்பன்

© TamilOnline.com