பரவை முனியம்மா
நாட்டுப்புறப் பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா (82) காலமானார். மதுரை மாவட்டத்தில் உள்ள 'பரவை' என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே நல்ல குரல்வளம் உடையவராக இருந்தார். கிராமத் திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். இனிய குரல், தெளிவான உச்சரிப்பு, அசாத்தியமாகப் பாடும் ஆற்றலால் தென் தமிழகமெங்கும் பிரபலமானார். நூற்றுக்கும் மேற்பட்ட கேசட்டுகள் இவர் பாடி அக்காலத்தில் வெளியாகின. இவரது திறமையைப் பார்த்த இயக்குநர் தரணி, தனது 'தூள்' படத்தில் இவரை நடிக்க வைத்தார். அதுமுதல் பல படங்களில் நடித்து வந்தார்.

சன் தொலைக்காட்சியில் வெளியான 'கிராமத்துச் சமையல்' என்னும் மண்பானைச் சமையல் நிகழ்ச்சி இவரை இந்தியாவுக்கு அப்பாலும் கொண்டு சேர்த்தது. லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். தமிழக அரசு இவருக்குக் 'கலைமாமணி' விருது வழங்கியது. கணவர் காலமானதை அடுத்துப் பரவை முனியம்மாவின் உடல்நிலையும் பாதிப்புக்கு உள்ளானது. நடிக்கவோ இயலாமல், பாடவோ இயலாமல் வறுமையில் வாடி வந்தவருக்கு, ஜெயலலிதா தலைமையிலான அரசு நிதி உதவியது. இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

© TamilOnline.com