அரங்கேற்றம்: கௌசிக் சிவகுமார்
ஆகஸ்ட் 3, 2019 அன்று வித்வான் ஜெயஶ்ரீ வரதராஜனின் மாணவரான கௌசிக் சிவகுமாரின் இசை அரங்கேற்றம் கேம்ப்பெல் ஹெரிடேஜ் அரங்கில் (கேம்ப்பெல், கலிஃபோர்னியா) நடைபெற்றது. வயலினில் விக்னேஷ் தியாக ராஜனும், மிருதங்கத்தில் விக்னேஷ் வெங்கடராமனும் பக்கவாத்தியங்களைத் திறம்பட இசைத்தார்கள்.

கானடா அடதாள "நேரநம்மிதி" வர்ணம் கச்சேரிக்கு நல்ல துவக்கமாக இருந்தது. தொடர்ந்து, முத்தையா பாகவதரின் "சக்தி கணபதிம்" என்ற நாட்டை ராகப்பாடலைச் சிறப்பாகப் பாடினார். சரணத்தில் கௌசிக்கின் ஸ்வர ப்ரஸ்தாரம் பிரமாதம். விக்னேஷ்கள் இருவரும் ஒருவரையொருவர் விஞ்சினர். கௌசிக் பிறகு ஆனந்த பைரவியில் ஒரு ஸ்லோகத்தையும், சியாமா சாஸ்திரிகளின் "மரிவேறேகதி எவரம்மா"வின் அழகை விளம்ப காலத்தை சிறப்பாகக் கையாண்டு வெளிப்படுத்தினார். அடுத்து முத்துஸ்வாமி தீட்சதரின் கனட பங்களாவில் ரேணுகாதேவி "சம்ரட்சிதோஹம்" மூலம் மாணிக்ய பூஷணி ஸ்வரபிரஸ்தாரத்தில் அதன் ஓட்டம் வெகு லாவகமாக அமைந்து கீர்த்தனைக்கு மெருகூட்டியது.

கச்சேரியின் மையநாதமாக அமைந்தது தியாகப்பிரும்மத்தின் காம்போதி ராக "ஓ ரங்க சாயி". கௌசிக்கின் ராக ஆலாபனை உச்சஸ்தாயி சஞ்சாரத்தில் சிறப்பாக அவரது குரல்வளத்தை எடுத்துக்காட்டியது. மூன்று கலைஞர்களும் நல்ல விஸ்தாரமான நிரவல்களுடனும், ஸ்வரப்ரஸ்தாரங்களுடனும் "பூலோக வைகுந்த"த்தை சிறப்பாகப் வழங்கினார்கள். ஷண்முகப்ரியாவில் ராகம், தானம், பல்லவி க்குமுன் ராகமாலிகையில் பாடிய "ஆரபிமானம்" நன்றாக இருந்தது. கௌசிக் விஸ்தாரமாக உச்ச ரிஷபத்தில் சஞ்சாரம் செய்தது ஒரு தனிச்சிறப்பு. இதைத் தொடர்ந்து விக்னேஷ் வயலினில் இசைத்த ராகம், தானம் மிக இனிமை. சதுஸ்ர ஜதி ஜம்ப தாளத்தில் கண்ட நடையில் "சிவகுமார ஸ்கந்தா, ஷண்முகா, வடிவேலா அருள்புரிவாய்" கௌசிக்கின் லயப்பிடிப்பை வெளிப்படுத்தியது. மனோதர்மத்தோடு காலப்பிரமாணம் திரிகாலத்திலும் சிறப்பாகக் கையாளப்பட்டது. கௌசிக் மேன்மேலும் வளர்ச்சி பெற்று, சிறந்த பாடகராக வருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

வித்வான் கார்த்திக் கோபாலரத்தினம்,
கேம்ப்பெல், கலிஃபோர்னியா

© TamilOnline.com