மிச்சிகன் தமிழ்ச்சங்கம் இலக்கிய விழா
மே 7, 2005 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை இலக்கிய விழாவாகக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சி Walled Lake High School வளாகத்தில் நடந்தேறியது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக டாக்டர். வெங்கடேசன் அவர்கள் இயக்கிய ‘தமிழுக்கோர் அன்னை’ என்ற நாடகம் இடம் பெற்றது. தமிழ் மூதாட்டி அவ்வையாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் நாடகம் இது.

அன்னையர் தினப் பரிசாகவும் இந்த நாடகம் அமைந்தது என்று கூறலாம். நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் தத்தம் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றினார்கள். அவ்வையாரின் வாழ்க்கை வரலாற்றில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது என்று நினைத்தவர்கள் திகைக்கும் வகையில் நாடகம் முழுவதும் நகைச் சுவையும், நடனங்களும் நிறைந்து காண் போருக்கு நல்ல விருந்தானது.

சிறுவயது அவ்வையாக நல்ல தமிழ் பேசி நடித்த திவ்யா ஐயரும், இளம்பருவ அவ்வையாகப் பிரமிக்க வைக்கும் முக பாவங்களுடன் நடித்த கிருத்திகா ராஜ்குமாரும், தான் ஏற்ற முதிய பாத்திரமாகவே மாறித் தோற்றத்திலும், அங்க அசைவு களிலும் அவ்வையை நம் கண்முன் கொண்டு வந்த ஆஷா சுந்தரும் பாராட்டுக்கு உரியவர்கள். சின்னானாக நடித்து உற்சாகமாக நடனமாடிய சதீஷ் சுப்பிர மணியம், அவரது இரு துணைவியராக நடித்த தாரிணி கைலாஷ் மற்றும் லலிதா ரவி, அடங்காத மனைவி மற்றும் அவரது அப்பாவித் துணைவராக நடித்த டாக்டர். ராஜாராம்-ரஞ்சனி தம்பதி, கருமித்தன செல்வந்தராக நடித்த நிரஞ்சன் ராவ் மற்றும் அவரது வேலையாளாக நடித்த டாக்டர். பாலநேத்ரம் ஆகியோரின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.

நாடகத்தின் இடையிடையே வந்த நடனங்களைக் கண்கவரும் விதத்தில் அமைத்திருந்தார் கலாரசனா நடனப்பள்ளி நடத்திவரும் தேவிகா ராகவன். அவ்வைப் பிராட்டியை வரவேற்கும் ஊர்வலக் காட்சி நாடகத்தின் உச்சக்கட்டம் எனலாம்.

மொத்தத்தில் இது போன்ற சிறந்த நாடகங்களை ஒவ்வொரு வருடமும் வழங்கி வரும் டாக்டர். வெங்கடேசன் அவர்களும் மேடையேற்றுகின்ற மிச்சிகன் தமிழ்ச்சங்கமும் என் போன்ற ஏராளமான தமிழ் நெஞ்சங் களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்றால் மிகையாகாது.

கல்பனா ஹரிஹரன்

© TamilOnline.com