அரங்கேற்றம்: லலித் நாராயண் கொவ்வுரி
ஆகஸ்ட் 11, 2019 அன்று, செல்வன் லலித் நாராயண் கொவ்வுரியின் மிருதங்க அரங்கேற்றம் லிவர்மோர் சிவா-விஷ்ணு ஆலயத்தின் லக்கிரெட்டி அரங்கத்தில் நடைபெற்றது. திருமதி வசுதா ரவி இசைக் கச்சேரிக்கு லலித் நாராயண் பக்கம் வாசித்தார். குரு ரமேஷ் ஸ்ரீனிவாசன் (சர்வலகு தாளக்கலை மையம், சான் ஹோசே) அவர்களின் மாணவராவார் லலித் நாராயண்.

நிகழ்ச்சிக்கு சங்கீத கலாநிதி டாக்டர் மோஹன் சந்திரமோஹன் முதன்மை விருந்தினராகவும், திருமதி லால்குடி ஸ்ரீமதி பிரம்மானந்தம் சிறப்பு விருந்தினராகவும் வந்திருந்தனர். விரிகுடாப் பகுதியின் பிரபல குருமார்களான திருமதி ஸ்ரீலக்ஷ்மி கோலவென்னு, திருமதி அனுராதா ஸ்ரீதர், நியூ ஜெர்சியிலிருந்து குரு திருமதி கல்யாணி ரமணி ஆகியோரும் வந்திருந்து சிறப்பித்தனர்.

"நேர நம்மிதி" என்ற கானடா ராக வர்ணத்தில் (அடதாளம்) கச்சேரி விறுவிறுப்பாகத் தொடங்கியது. திஸ்ர நடையில் அதற்கு லலித் வாசித்தது கேட்க ஆனந்தம். "வந்தேஹம் ஜகத் வல்லபம்" என்ற ஹம்ஸத்வனி ராக கணேசர் துதிக்குக் கல்பனா ஸ்வரங்கள் பாடினார் வசுதா. சிறியதானாலும் லலிதா ராக ஆலாபனை வசுதாவின் குரல் வளத்தைக் காட்டப் போதுமானதாக இருந்தது. "ஹிரண்மயீம்" கிருதியின் "ஹரி வக்ஷஸ்தலம்" என்ற வரிக்கு லலித் நாராயணின் துரித கால வாசிப்பு வெகு அழகு. "மித்ரி பாக்யமே" என்ற தியாகராஜ கிருதிக்குப் பின்னர் தனி வாசிக்கையில் வெவ்வேறு நடைகளில் வாசித்துச் சுமார் ஒருமணி நேரம் கலக்கிவிட்டார் லலித். கொன்னக்கோலில் இவர் கூறிய ஜதிகளும் ரசிகர்களைப் பரவசப்படுத்தின. திருப்பாவைக்குப் பின் லால்குடி ஜெயராமனின் தேஷ் ராகத் தில்லானாவுடன் கச்சேரி நிறைவெய்தியது.

கச்சேரிக்குத் திருமதி பாரதி கோபாலகிருஷ்ணன் (வயலின்), திரு எஸ்.வி. ரமணி (கடம்) ஆகியோர் திறம்படப் பக்கம் வாசித்தனர்.

ஆங்கிலத்தில்: வசந்தா கோட்டபள்ளி
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com