அரங்கேற்றம்: தன்வி காமத்
ஆகஸ்ட் 25, 2019 அன்று மைத்ரி நாட்டியாலயாவின் ஷிரிணி ஸ்ரீகாந்த் அவர்களின் சிஷ்யையான செல்வி தன்வி காமத்தின் குச்சுபுடி நடன அரங்கேற்றம் சான்ட க்ளாரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மேயர் அரங்கத்தில் நடந்தது.

விநாயக ஸ்லோகத்துடனும், பின்தொடர்ந்த "ஸ்ரீ கணபதி" எனத்துவங்கும் தியாகராஜரின் சௌராஷ்ட்ர ராக, ஆதி தாளப்பாடலுடனும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஹம்சாநந்தி ராகத்தில் "சங்கர ஸ்ரீகிரி" என்ற சுவாதித் திருநாளின் கீர்த்தனைக்கு தன்வி, தன் அழகிய உடையாலும், நளினமான நடன அசைவுகளாலும் அவையோரை பிரமிக்க வைத்தார். அடுத்து, ஷண்முகப்பிரியா வர்ணத்தில் "ஜய ஜய துர்கே" என்ற நாராயண தீர்த்தரின் பாடலுக்கு, துர்கையாகவே மாறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். நிகழ்ச்சிக்கு வந்திருந்த மதுரை ஆர். முரளிதரன் குரு ஷிரிணியின் திறமையையும் தன்வியின் நடனத் தேர்ச்சியையும் பாராட்டினார்.

இரண்டாவது பகுதியில் தியாகராஜரின் "ஜகதாநந்த காரகா" என்ற நாட்டை ராகப் பாடலில் கரகோஷத்தைப் பெற்றார். பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் கமாஸ் ராக ஜாவளிக்குத் தன்வியின் ஜதி நேர்த்தி விறுவிறுப்ப்பு. இறுதியாக, குரு ஹரி ராமமூர்த்தியின் தில்லானாவுக்குத் தன்வி மேடையில் மேகம்போல மிதக்கிறாரோ என வியக்க வைத்தார். "ஹரிமணா" என்ற மராத்தி பஜனையுடன் நிகழ்ச்சி மங்களகரமாக நிறைவுற்றது.

டாக்டர் வாசுதேவன் (வாய்ப்பாட்டு), குரு ஷிரிணி (நட்டுவாங்கம்), தஞ்சாவூர் கேசவன் (மிருதங்கம்), நயனதாரா நரசிம்மன் (வயலின்) அஸ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) ஆகியோர் நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக நின்று பரிமளிக்கச் செய்தார்கள். தன்வியின் பெற்றோர் அபிராமி-ரமேஷ் காமத் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

தன்வி கூப்பர்டினோவில் ஒன்பதாவது வகுப்பில் படிக்கிறார். அவர் பள்ளி இசைக்குழுவில் கிடார், சாக்ஸபோன் முதலிய வாத்தியங்களை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். கர்நாடக சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். டேக்வாண்டோவில் முதல் டிகிரி கறுப்பு பெல்ட் வாங்கியுள்ளார். சிறந்த கூடைப்பந்து வீரரும்கூட.

சுபத்ரா பெருமாள்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com