புண்படுத்துவதா? பண்படுத்துவதா?
அன்புள்ள சிநேகிதியே,
சமீபத்திய தென்றல் இதழில் பொறுப்பில்லாத ஒரு 23 வயதுப் பெண்ணைச் சமாளிக்கத் தெரியாமல் இருந்த ஒரு சிநேகிதிக்கு பொறுமை, கடமை, உரிமை அவசியம் என்று எழுதி இருக்கிறீர்கள். எனக்கு உங்கள் அறிவுரையை ஏற்க முடியவில்லை. மாங்கு மாங்கென்று ஒரு உறவினர் எல்லா வசதிகளும் செய்துகொடுத்தபோது, அந்தப் பெண்ணும், அவள் அம்மாவும் நடந்து கொண்டவிதம் கொஞ்சம்கூடச் சரியில்லை. The girl took everything and everybody for granted. நானாக இருந்தால், "நமக்குள் சரிப்பட்டு வரவில்லை. நீ ஏதேனும் ஹோட்டல் அல்லது தற்காலிக இருப்பிடம் பார்த்துக் கொடுத்து விடுகிறோம்" என்று கறாராகச் சொல்லிவிடுவேன். எப்போதோ பண உதவி செய்ததற்காக அந்தப் பெண்ணின் அம்மாவும் பேசாமல் இருப்பதும் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இல்லை. எனக்குக் கோபம்தான் வருகிறது. இந்த நிலையில் எப்படிப் பொறுமையாக இருக்கமுடியும்? நம் குழந்தைகளாக இருந்தாலே நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நீங்கள் சொல்வது 'ideal solution.' ஆனால், நிஜத்தில் அப்படி ஆக இருக்க முடியுமா என்று புரியவில்லை. I feel that girl deserves a big spanking. என்ன ஆகிவிடப் போகிறது? அந்த உறவு முறியப்போகிறது. இதுபோன்ற உறவுகள் இருந்து என்ன பிரயோஜனம்? எல்லாவற்றிற்கும் பிரதியுபகாரம் எதிர்பார்த்துக்கொண்டு! ஒன்று, அவளுடைய அம்மா புத்தி சொல்லியிருக்க வேண்டும். இல்லை, அந்த உறவினர் ஒருவர் ரெஸ்டாரண்ட் அல்லது பார்க்குக்குக் கூட்டிக்கொண்டு போய் நல்லதனமாகச் சொல்லியிருக்க வேண்டும். இல்லை, நீங்களாவது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அந்தப் பெண்ணுடன் பேசி, சரிக்கட்டி இருக்கலாம். எங்களுக்கும் இதுபோல ஓர் அனுபவம். 27 வயதுப் பையன். நம்பி வீட்டை விட்டுவிட்டு 3-4 நாட்கள் போனோம். நாங்கள் இல்லாத சமயத்தில் கேர்ள் ஃப்ரெண்ட்ஸைக் கூட்டிக்கொண்டு வைத்து, தண்ணி பார்ட்டி கொடுத்து, வீட்டை கந்தரகோளம் பண்ணியிருந்தான். ஓரளவு சுத்தம் செய்யப் பார்த்திருக்கிறான். நாங்கள் கண்டுபிடித்தவுடன் மன்னிப்புக் கேட்டான். ஆனால் அவனைக் காலி செய்ய வைத்து விட்டோம். அவனைப் பரிந்துரைத்த உறவினருக்கும் தகவல் கூறிவிட்டோம். அவ்வளவுதான். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சில அடிப்படை விதிகள் உள்ளன. வரும் விருந்தினர் அதை மதிக்கவும் கடைப்பிடிக்கவும் வேண்டும். எல்லாமே mutual தானே. Why are you taking a Passive approach?

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதியே,
நீங்கள் எழுதியிருப்பது எல்லாமே இயல்பாக நடைமுறையில் நாம் என்ன யோசிப்போமா அதைத்தான் எழுதி இருக்கிறீர்கள். இதுபோன்ற நடத்தையில் நமக்கு முதலில் தோன்றுவது எரிச்சல்தான். அதுவும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நீங்கள் எழுதியதுபோல அந்தச் சிநேகிதியும் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தால் (எல்லாரையும்போல) எனக்கு அவர் எழுதியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அந்த இளம்பெண்ணை (எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருந்ததாலும்) ஒரு தாயின் மனம் புண்படுத்த விரும்பவில்லை. மிகவும் மென்மையான குணம் உள்ளவராக இருந்திருக்கக்கூடும். புண்படுத்தாமல் அந்தப் பெண்ணின் போக்கைப் பண்படுத்தும் வழியில் அவர் பாடுபடுகிறார் என்று நினைக்கிறேன். அந்த முயற்சியில் அவருடைய நிம்மதி போய் விட்டிருக்கிறது. எவ்வளவு செய்தாலும் முடிவில் அதெல்லாம் பலன் இல்லாமல் போனதே என்ற வருத்தமும் இருக்கிறது.

நீங்கள் என்னை அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கொடுக்கச் சொல்லி எழுதி இருக்கிறீர்கள். அது என்னுடைய வரம்புக்கு அப்பாற்பட்டது. இரண்டாவது, நான் அறிவுரை, உபதேசம் என்பதில் நம்பிக்கை வைப்பதில்லை. என் கருத்துக்களை ஆழமாகப் பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய கணிப்பில்: "நாமே நாம் சொல்படி நடந்து கொள்வதில்லை. வேறு யார் கேட்கப் போகிறார்கள்?"

இங்கே மனநிம்மதிதான் குறிக்கோள். நமக்கு நிம்மதி வேண்டும் என்றால் நாம்தான் நம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஓர் அடிப்படை பெர்சனாலிட்டி இருக்கிறது. பணம், புகழ், உறவு என்று உதாரணத்திற்கு 3 அம்சங்களை எடுத்துக் கொண்டால், எது நமக்கு இதமாகவும், இன்பமாகவும் படுகிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வழியில் செல்லும்போது, மற்ற இரண்டும் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் வரக்கூடாது. சிலர் மூன்றையும் அழகாகச் சமாளிக்கிகிறார்கள். சிலர் மூன்றும் இருந்தாலும் வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஒருவகை பெர்சனாலிட்டி. ஆக, மனம் மகிழ்ச்சியாக இருக்க, நாம் வாழ்க்கையில் எதையாவது விட்டுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறோம். இதில் பார்க்க வேண்டியது, அந்த விட்டுக்கொடுத்தல் நமக்கு மனநிம்மதியைக் கொடுக்கிறதா என்பதுதான். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது Material things take the backseat. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உறவுகள் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும். புகழுக்கு ஏங்கினால் பணம், உறவு என்றெல்லாம் பார்க்க முடியாது. மன நிம்மதிக்கு வேண்டியது, எது நமக்கு அபரிமிதமாக இருந்தாலும் அதைச் சரிவரக் கையாண்டு, ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும் படியாகச் செய்யும் மனப்பக்குவம். எனக்குத் தெரிந்த வகையில் அந்தச் சிநேகிதிக்கு உறவு முக்கியமாகப் படுவதுபோல் இருந்தது. ஆகவே அவருடைய கண்ணோட்டத்தைச் சிறிது மாற்றி மனதிற்குக் கொஞ்சம் இதமாக இருக்க, நான் அந்த நிலையில் இருந்தால் எப்படி இருப்பேன் என்று எனக்குத் தெரிந்த வழிமுறைகளைச் சொன்னேன். இது என் கருத்துக்கள்தாம். அறிவுரை அல்ல. நம்மால் பிறரை மாற்றமுடியாத நிலையில், அதைப்பற்றியே நினைத்து நினைத்து மன உளைச்சலில் மாட்டிக் கொள்வதை விட, நம் எண்ணப் போக்கைத் தளர்த்திக் கொண்டால், we are at peace.

மீண்டும் சந்திப்போம்., வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com