லஷ்மி நாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி கலைநிகழ்ச்சி
8.27.2006 அன்று, லாஸேன்சலஸ் மலிபு கோவிலில், கார்கள் நிறுத்தும் இடங்கள் எல்லாம் நிரம்பி வழிய, திரள்திரளாக மக்கள் கூட்டம் பிள்ளையார் கோயிலில் சூழ்ந்து இருந்தனர். ஏது இவ்வளவு பெரிய கூட்டம் என்றா நினைக்கிறீர்கள்? பிள்ளையார் சதுர்த்தி கோலாகல விழாவைக் கண்டு ரசித்து, பிள்ளையாரின் அனுக்கிரகத்தைப் பெறவே மக்கள் ஒன்று திரண்டு இருந்தனர். சாஸ்திரி அவர்கள் பிள்ளையார் ஹோமத்தை நன்கு செய்து முடித்து; பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தத்தால் தும்பிக்கை நாதனைக் குளிர வைத்து; பூக்களாலும் பட்டாடைகளாலும் பிள்ளையாரை அலங்கரித்தார். பிள்ளையாரின் இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்து, மக்கள் அடைந்த பூரிப்பை, வார்த்தை களாலும் விவரிக்க முடியாது. அவ்வளவு அருமையாக பிள்ளை யார் சதுர்த்தி விழா மலிபு கோவிலில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவைத் தொடர்ந்து லஷ்மி நாராயணா இசைப்பள்ளி இயக்குனர் கானசரஸ்வதி தலைமையில் கலைஞர்கள் மதியம் 1:30 மணி முதல் மாலை 5:45 மணி வரை பிள்ளையாருக்கு கானமாலைச் சூட்டி அலங்கரித்து, மக்களை இசைக்கடலில் திளைக்கச் செய்தனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் அமோகமாக நடைப்பெற்றது. 3 முதல்10 வயது சிறுவர்கள், சிறுமிகள் கீதம், ஸ்வரஜதி, கிருதி பாடி சபையோரை மெய்சிலிர்க்கச் செய்தனர். செல்வி சங்கீதா, ரோஷ்ணி, ஸ்வாதி, ப்ரசன்னா, சங்கீதா அருண், க்ளோரியா, வித்யா, ஆனந்த், சுபா, கிருஷ்ணா, சந்திரமோகன், உமா, கீதா அவர்கள் கிருதி, கீர்த்தனை, ராகமாலிகை பாமாலைகளால் பிள்ளையாரை அலங்கரித்து சபையோரை மகிழ்ச்சிக் கடலில் திளைக்கச் செய்தனர். அந்தரரூப சிவதேவா தனது கிதார் வாத்தியத்தில் தியாகராஜ கிருதிகள் வாசித்து பலத்த கரகோஷம் பெற்றார். இசைப் பள்ளியின் இயக்குனர் கானசரஸ்வதியும், அவர் மகள் செல்வி சங்கீதாவும் கலை நிகழ்ச்சியின் சிறப்பான தெய்வீக பாடல்களை விநாயகப்பெருமானுக்கு அர்ச்சித்து சபையின் பலத்த கரகோஷத்தைப் பெற்றனர். இக்கலை நிகழ்ச்சிகளுக்கு ராம்ஜி, வெங்கட், லியோனஸ் மிருதங்கம், கஞ்சிரா, தவில், கடம், தபேலா பக்கமேளம் வாசித்து நிகழ்ச்சிகளைக் களைக்கட்டச் செய்தனர். முடிவில் கான சரஸ்வதியும் அவரது சிஷ்யர்களும் ஒன்று சேர்ந்து பஜன்பாடல் மலர்களால் விநாயகரை அர்ச்சித்து, சிவன் மங்களத்துடன் கலை நிகழ்ச்சியை அமோகமாக முடித்து சபையோர்களின் பாராட்டுதலைப் பெற்றது குறிப்பிடத் தக்கது.

9.10.06 அன்று Santa Monica இடத்தில் கானசரஸ்வதியும் அவரது மகள் செல்வி சங்கீதாவும் மற்றும் உமா, பிரசன்னா, ரோஷ்ணி அவர்கள் மும்பையில் ஆயிரத்தி ஒன்று யோகிகளால் நடக்க இருக்கும் "லக்ஷ்சண்டி மகாயக்னா"விற்கு நிதி திரட்டும் பத்மஸ்ரீ பவுண்டேஷனுக்குப் பாடி சபை யோரை இசை வெள்ளத்தில் திளைக்க செய்தது குறிப்பிடத்தக்கது.

செல்வி

© TamilOnline.com