தெரியுமா?:எழுத்தாளர் இமையத்துக்கு இயல் விருது
2018ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத்தோட்ட இயல் விருது, வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் இமையத்திற்கு 9 ஜூன் 2019 அன்று கனடாவில் வழங்கப் பட்டது. விருது வழங்கும் விழாவில், மருத்துவர் ஜானகிராமன், கனேடியநாடாளுமன்ற உறுப்பினர் கரீஆனந்தசங்கரீ, டைலர் ரிச்சார்ட், எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இயல் விருதுடன் மற்றைய வருடாந்தர விருதுகளும் வழங்கப்பட்டன.

ஏற்புரையில் எழுத்தாளர் இமையம் "நான் எழுதியுள்ள ஐந்து நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நெடுங்கதையும் என் அறிவின் பலத்தால், சிந்தனையின், கற்பனையின், மதிநுட்பத்தின் பலத்தால் எழுதப்பட்டவையல்ல. எழுத்தாளனாகியே தீரவேண்டும் என்ற வேட்கையினாலோ, எழுத்தாளனாகிவிட்டேன், அதனால் தொடர்ந்து எழுதித்தான் தீரவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ எழுதப்பட்டவையல்ல. நடைமுறைச் சமூகத்தின் நிஜவாழ்க்கை என்ற கந்தக நெருப்புத்தான் என்னை எழுதத் தூண்டியது. இப்போதும் எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது" என்று பேசினார்.

புனைவுப் பரிசு: தீபச்செல்வன், 'நடுகல்' நாவல்
அபுனைவுப் பரிசு: உமாஜி, 'காக்கா கொத்திய காயம்'
கவிதைப் பரிசு: போகன் சங்கர், 'சிறிய எண்கள் தூங்கும் அறை'
மொழிபெயர்ப்புப் பரிசு: இரா. முருகன், 'பீரங்கிப்பாடல்கள்'
ஆங்கில மொழிபெயர்ப்புப் பரிசு: பேராசிரியர்ரங்கசாமிகார்த்திகேசு, 'Beyond the Sea'
சுந்தர ராமசாமிநினைவு கணிமை விருது: ராமசாமி துரைபாண்டி
மாணவர் கட்டுரைப் போட்டி பரிசு: செல்வி கல்யாணி ராதாகிருஷ்ணன்
சிறப்புப் பரிசுகள்: எஸ். திருச்செல்வம், ம.நவீன்
சிறந்த அனுசரணையாளர் விருது: யோகி தம்பிராசா

எழுத்தாளர்களும் வாசகர்களும் அனுசரணையாளர்களும் நிறைந்திருந்த கூட்டம் இரவு உணவுடன் சிறப்பாக நிறைவுற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com