அரங்கேற்றம்: சுரபி ஹரீந்திரநாத்
மார்ச் 17ஆம் தேதி செல்வி சுரபி ஹரீந்திரநாத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சான் ரமோன் டோகர்ட்டி வேலி அரங்கில் நடைபெற்றது. சுரபி, ஃப்ரீமான்டில் உள்ள ஸ்ரீ லலிதகான வித்யாலயா இசைப்பள்ளியில் குரு ஸ்ரீமதி லதா ஸ்ரீராமிடம் எட்டு வருடங்களாகக் கர்நாடக இசை கற்றுத் தேர்ச்சி பெற்றவர்.

பைரவி வர்ணம் மற்றும் முத்துசுவாமி தீக்ஷிதரின் "சித்தி விநாயகம்" (ஷண்முகப்ரியா) கிருதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. லலிதா ராகத்தில் "ஹிரண்மயீம் லக்ஷ்மீம்", ரமாமனோஹரி ராகத்தில் "ஸ்மராம்யஹம்" என்று மேலும் இரண்டு தீக்ஷிதர் கிருதிகளைச் சிறப்பாகப் பாடினார். மகாராஜா ஸ்வாதித் திருநாளின் "பாஹி ஜகத்ஜனனி"யை ஹம்சானந்தி ராகத்தில் ஆலாபனையுடன் பாடினார். ஆஹிரியில் அமைந்த "பனிமதி முகி பாலே" என்கிற ஸ்வாதித் திருநாள் கிருதி, ரசாளி ராகத்தில் "அபராதமுல" தியாகராஜ கிருதி, சரசாங்கியில் "நீகேல தயராது" எனத் தொடர்ந்து நிகழ்ச்சி களை கட்டியது.

பாபநாசம் சிவனின் "அப்பன் அவதரித்த" பாடலை கரஹரப்ரியாவில் ஆலாபனையுடன் பாடியது எல்லோரையும் கவர்ந்தது. ஷ்யாமா சாஸ்த்ரியின் சங்கரி சன்குரு க்ருதியை சாவேரியில் ராக ஆலாபனையுடன் தொடங்கி, நிரவல், கல்பனா ஸ்வரத்துடன் மையப் பாடலாகப் பாடியபோது சுரபிக்கு மிக்க பக்கபலமாக ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் மிருதங்கமும், விக்ரம் ரகுகுமார் வயலினும் வாசித்தனர். தஞ்சாவூர் சங்கரையர் இயற்றிய "ரஞ்சனி மாலா"வும், யமுனா கல்யாணியில் "கிருஷ்ணா நீ பேகனே பாரோ"வும் மிக இனிமை. நாமதேவரின் "பக்தஜன வத்சலே" என்ற அபங்கை பிருந்தாவன சாரங்காவில் பக்தி ரசத்துடன் பாடினார். லால்குடி ஜெயராமனின் மாண்டு தில்லானாவும், ஜோன்புரியில் "சிவனார் மனம் குளிர" என்ற திருப்புகழும் நிகழ்ச்சியை நிறைவு செய்தன. சுரபியின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பாடல் தேர்வு அமைந்ததிருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் குரு லதா ஸ்ரீராம் சுரபிக்குச் சான்றுரை பொறிக்கப்பட்ட ஒரு வெள்ளித்தட்டை அளித்துப் பாராட்டினார். சுரபி மௌண்டன்ஹவுஸ் உயர்நிலைப்பள்ளியின் இறுதியாண்டு மாணவி.

ரமாதேவி ராமசுப்பன்,
சான் ஹோஸே

© TamilOnline.com