அரவிந்த் சுப்ரமணியம்
இந்திய அமெரிக்கரும் மூலக்கூறு உயிரியலாருமான (Molecular Biologist) அரவிந்த் சுப்ரமணியம், உயிரணு ஆராய்ச்சிக்காக ஐந்தாண்டுக் காலத்துக்கு $920,000 தொகையைத் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் CAREER நிதிநல்கையாகப் பெற்றுள்ளார். இவர் சியாட்டிலில் (வாஷிங்டன்) உள்ள ஃப்ரெட் ஹட்சின்ஸன் புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்.

உயிரணுவில் புரதத் தொகுப்புருவாக்கம் (Protein Synthesis) தடைப்படும்போது, உயிரணுக்கள் அதனை எவ்வாறு சமாளிக்கின்றன என்பதற்கான கணினி மாதிரிகளை உண்டாக்குவது இந்நிதியின் நோக்கமாகும். உயிரணுக்கள் தமது செயல்பாடுகளுக்கெல்லாம் புரதத்தைச் சார்ந்திருக்கும் நிலையில் புற்றுநோய் போன்ற நோய்களின் காரணமாகப் புரதம் உருவாவது கட்டுக்கடங்காமல் போகின்றன. "நமது உடலிலுள்ள எல்லாச் செல்களுமே தமது செயல்பாடுகளுக்குப் புரதத்தை நம்பியுள்ளன. இந்தப் புரத உருவாக்கத்தின் முக்கியக்கட்டம் ரைபோசோம்களைச் சார்ந்துள்ளது. இந்த ஆய்வின் நோக்கம், ரைபோசோம்களின் இயக்கம் எவ்வாறு நிகழ்கிறது, அது தடைப்பட்டால் என்ன ஆகிறது என்பதைத் துல்லியமாகக் கணிப்பதுதான்" என்கிறார் அரவிந்த் சுப்ரமணியம்.

ஆராய்ச்சி, கணினி மாதிரியமைத்தல் (Computer modelling) இவ்விரண்டையும் இணையாகச் செய்துவர வேண்டிய ஆய்வுத்திட்டம் இது. இதனைச் செய்யும் பொருட்டாக அடிப்படை அறிவியல் பிரிவு மற்றும் ஹெர்போல்டு கணக்கீட்டு உயிரியல் பணித்திட்டம் (Herbold Computational Biology Program) ஆகிய இரண்டிலும் அரவிந்த் சுப்ரமணியம் நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

"நேரடியாக நோயினை ஆராய்வதென்றில்லாமல், உயிரியல் ஆய்வாக இதை நடத்துவதற்கு தேசிய அறிவியல் அறக்கட்டளை உதவுவது மிகச்சிறப்பு" எனப் பாராட்டுகிறார் அரவிந்த் சுப்ரமணியம். அவரது ஆய்வு சிறக்கவும், அதன்மூலம் பல அடிப்படை உண்மைகள் புரிபடவும் தென்றல் வாழ்த்துகிறது.

மதுரபாரதி

© TamilOnline.com