சிகாகோ: 'பெண்' அமைப்பின் சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 9, 2019 அன்று சிகாகோ 'பெண்' குழுவினரின் சர்வதேச மகளிர்தினக் கொண்டாட்டம் செயின்ட் நிரங்காரி மிஷன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திருமதி ரமா ரகுராம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அனைவரையும் வரவேற்றார். அமைப்பின் ஊடகவியலாளர் திருமதி தேவி அண்ணாமலை 'பெண் உறுதிமொழி'யை முன்மொழிய அனைவரும் வழிமொழிய நிகழ்ச்சி தொடங்கியது.

பெண்களால் பெண்களுக்கென நடத்தப்படும் 'பூவிதழ்' தொகுப்பின் ஐந்தாம் மலரை மருத்துவர் மீனா ரங்கராஜன் வெளியிட்டார். ஆரோக்கியமான இல்லம் என்ற தலைப்பில் திருமதி பூமா சுந்தர் சமையலறையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை விளக்கினார். அழகுக் குறிப்புகளைத் திருமதி பல்லவி திவாகர் செயல்முறை விளக்கங்களுடன் வழங்கினார். ஆரோக்கிய வாழ்விற்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் மருத்துவர் தீபாலி அதுல் சர்க்கரையின் தீமைகளை நகைச்சுவையுடன் விளக்கியது அருமை.

மழலைப் பருவம் முதல் இளமைவரை கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ வழிமுறைகளை மருத்துவர் பிரியா ரமேஷ் எடுத்துரைத்தார்.

இளமைக்காலக் கோபங்களை எப்படிக் கையாள்வது என்று இளமை ததும்பச் செல்வி மேக்னா ஸ்ரீதர் வழங்கிய வழிமுறைகள் வரவேற்கத்தக்கன. வீணைக் கலைஞர் திருமதி சரஸ்வதி ரெங்கநாதன் அவர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், வீணை இசையாலும் மெய்மறக்கச் செய்தார்.

அமைப்பின் உறுப்பினர் திருமதி ஸ்ரீ குருசாமி நேப்பர்வில் ஹவுசிங் ஆலோசனைக் குழுவின் முதல் இந்திய-அமெரிக்கக் கமிஷனராக நியமிக்கப்பட்ட செய்தி அனைவரையும் மகிழ்வித்தது. அவருக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. திருமதி கலை சோமு அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான 'நட்சத்திரப் பெண்' விருது வழங்கப்பட்டது. திருமதி சுசீலா ராஜேஷ், திருமதி காயத்ரி சுவாமிநாதன் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.

விஜி கிருஷ்ணன்,
கிரேய்ஸ் லேக்

© TamilOnline.com