குருக்ருபா: ஜுகல்பந்தி
மார்ச் 24, 2019 அன்று குருக்ருபா இசைப்பள்ளி (சான் ஹோசே, சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி) ஷிரடி சாயி பரிவார் அரங்கில் ஜுகல்பந்தி ஒன்றை வழங்கியது. ஒவ்வோராண்டும் சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட பாணிகளைச் சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்துவதை குருக்ருபா வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இவ்வாண்டு ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை சேர்ந்த ஜுகல்பந்தியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் திருமதி ஸ்வஸ்தி பாண்டே ஹிந்துஸ்தானி இசையும், திருமதி சங்கீதா சம்பத் கர்நாடக இசையும் வழங்கினர். இவ்விரண்டு இசைகளின் தனித்துவம் வெளிப்பட்ட அதே நேரத்தில், இரண்டும் எவ்வாறு இயைந்து ஒலிக்கமுடியும் என்பதும் இந்நிகழ்ச்சியில் வெளிப்பட்டதை ரசிகர்களால் உணரமுடிந்தது.

திரு ரிஷிகுமார் (சாரடோகா நகரக் கவுன்சில் உறுப்பினர்), பிரபல இசைக்கலைஞர் திரு சிக்கில் குருசரண், திரு நாதன் கணேசன் (நிறுவனர், கம்யூனிட்டி சேவா) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். சாரடோகா நகரக் கவுன்சிலின் சார்பில் திரு ரிஷிகுமார் குருக்ருபாவின் செயல்பாடுகளைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.

குருக்ருபா இசைப்பள்ளி நிறுவனரும் இயக்குநருமான திருமதி சங்கீதா, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரின் இசைப்பாணியில் குரு ஞானஸ்கந்தன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டார். அவர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சங்கீதக் கச்சேரிகள் நிகழ்த்தி வருகிறார். இசையின் மூலம் சமுதாயத்தை இணைக்கவும், 2015ம் ஆண்டின் வெள்ளத்துக்குப் பின்னர் வேலை வாய்ப்புப் பள்ளிகளைச் சென்னையில் ஏற்படுத்தவும் அவர் செய்த பணிகளைப் பாராட்டும் வண்ணம் 2017ம் ஆண்டில் 'மனிதநேய விருது' அவருக்கு இந்தியத் துணை ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com