தெரியுமா?: ராஜ் சுப்ரமணியம் FedEx கார்ப்பரேஷனின் தலைவர் & COO ஆக நியமனம்
2019 ஜனவரி 1ம் தேதி முதல் திரு. ராஜ் சுப்ரமணியம் ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமைச் செயல்பாடுகள் அதிகாரியாக (Chief Operations Officer) நியமிக்கப்பட்டுள்ளது இந்திய வழிவந்தோருக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும். FedEx நிறுவனத்தில் 27 ஆண்டுகளாகப் பல்வேறு பதவிகளை வகித்துள்ள ராஜ், கேரளத்தின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். IIT மும்பையில் வேதிப் பொறியியலில் பட்டம் பெற்றபின் சிராக்யூஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், ஆஸ்டினில் உள்ள டெக்சஸ் பல்கலையில் MBA பட்டமும் பெற்றார்.

மெம்ஃபிஸ் நகரில் FedEx நிறுவனத்தில் தனது பணியைத் துவக்கிய ராஜ், ஹாங்காங் நகரில் அடுத்து ஆசியா பசிஃபிக் பிராந்தியத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்குப் பொறுப்பேற்றார். அடுத்து ஃபெடெக்ஸ் எக்ஸ்பிரஸின் தலைவராகக் கனடாவில் பணியாற்றிய பின் பன்னாட்டுச் சந்தைப்படுத்தலின் முதுநிலை துணைத்தலைவராக மீண்டும் அமெரிக்காவுக்கு வந்தார். 2013ல் அவர் அதன் மார்க்கெட்டிங் நிர்வாகத் துணைத்தலைவராக உயர்ந்தார். 2017ம் ஆண்டு அவர் ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாகத் துணைத்தலைவர் மற்றும் சீஃப் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் அலுவலராகப் பதவியேற்றார்.

அவரது சாதனைகளுக்காக அவர் பெற்ற கௌரவங்கள்: சிறந்த முன்னள் மாணவர், IIT மும்பை; புகழ்பெற்றோர் அரங்கம், ஃபோகல்மன் கல்லூரி, மெம்ஃபிஸ் பல்கலை; சிறப்புற்ற நண்பர், மெம்ஃபிஸ் பல்கலை.

தவிர அவர் First Horizon National Corporation நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருக்கிறார். World 50, the US-India Strategic Partnership Forum உட்படப் பல வணிகக் கூட்டமைப்புகளின் உறுப்பினராகவும் உள்ளார்.

சற்றேறக்குறைய 357,000 பணியாளர்களைக் கொண்ட ஃபெடெக்ஸ், மிகப்பெரிய எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: மதுரபாரதி

© TamilOnline.com