நியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா
ஃபிப்ரவரி 2, 2019 அன்று, நியூ ஜெர்சி மாநிலம், வெஸ்ட் விண்ட்சர் நகரில் செயல்படும் வள்ளலார் தமிழ்ப் பள்ளியின், நான்காம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் குறள் தேனீப் போட்டி, செய்யுள் போட்டி, ஆத்திசூடிப் போட்டி, எழுத்துத் தேனீப் போட்டி, பேச்சுப் போட்டி, மழலைப் பாடல்கள் போட்டி, மாறுவேடப் போட்டி ஆகியவற்றுடன் பொங்கல் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.

விழா காலை 11 மணிக்கு தொடங்கியது. விழாவினை ஆசிரியர் திருமதி தீபா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் திருமதி பிரேமா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து மழலைநிலை மாணவர்களின் மாறுவேடப் போட்டி நடந்து. ஒளவையார், பாரதியார் எனப் பல்வேறு வேடங்களில் மாணவர்கள் மேடையில் தோன்றி, பார்வையாளர்களைக் கவர்ந்தனர். பின்னர் பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திருமதி பொற்செல்வி வேந்தன் வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பொங்கல் போட்டிகள் குறித்துப் பேசினார்.

தொடர்ந்து நடந்த போட்டிகளில் மழலை நிலை மாணவர்கள் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆத்திசூடிகளைக் கூறி அனைவரையும் கவர்ந்தனர். அது போலவே குறள் தேனீப் போட்டியில் அடிப்படை நிலை 2 மாணவர்கள் சுமார் 35 குறட்பாக்களைக் கூறியது போட்டிகளின் சிறப்பம்சமாக இருந்தது. பிறகு, உழவுத் தொழிலையும், நாட்டுப் புறப்பாடல்களையும் மையமாகக் கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியின் தலைமையாசிரியர் திரு சசிகுமார் ரெங்கநாதன் நன்றி கூறினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பங்கேற்புப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இறுதியாக பள்ளிப் பறையிசைக் குழுவின் இசைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்களின் கும்மி நடனத்துடன் விழா நிறைவுற்றது.

தமிழ்ச்செல்வி,
நியூ ஜெர்சி

© TamilOnline.com