ஆல்ஃபரெட்டா தமிழ்ப்பள்ளி பொங்கல் விழா
ஜனவரி 13, 2019 அன்று அட்லாண்டாவின் ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. இப்பள்ளியில் படிக்கும் சுமார் 200 சிறுவர், சிறுமியர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்புற நடத்தினார்கள். இந்த வருடம் 'திணை' என்ற கருப்பொருளில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களில் வாழும் மக்களின் வாழ்முறைகளை அழகாக ஆடிக் காட்டினார்கள். நேர்த்தியான ஆடலும், கண்கவர் உடை அலங்காரமும் பார்த்தோரைக் கவர்ந்தது.

ஆல்ஃபரெட்டா தமிழ்ப்பள்ளி 16 வருடங்களாக அட்லாண்டா பகுதி மக்களுக்குத் தமிழ் கற்பித்து வருகிறது. 2௦௦2ம் ஆண்டில் 5 மாணவர்களுடன் ஆரம்பித்த இப்பள்ளியில் இப்போது 820 பேர் தமிழ் கற்று வருகிறார்கள். திருமதி சுந்தரி குமார் தலைமையில் திரு ராஜா வேணுகோபால், திரு தங்கமணி பாலசாமி, டாக்டர் ராஜா நிக்கோலஸ் ஆகியோர் பள்ளியைச் சிறப்புற நிர்வகிக்கிறார்கள். கலிஃபோர்னியா தமிழ்க் கழகப் பாடத்திட்டம் இங்கே பின்பற்றப் படுகிறது. தமிழைச் சிறப்பு மொழிக் கல்வியாகப் பயிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் புள்ளிகளை வழங்க ஜார்ஜியா அக்ரெடிடேஷன் கமிஷன் ஏற்றுள்ளது. மேலும் இந்த மாநிலக் கல்வித்துறை, தமிழை இருமொழி எழுத்தறிவுப் பட்டியலில் இணைத்துள்ளது.

பத்மா மணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com