ஹவாய்: பொங்கல் விழாவில் TNF
ஜனவரி 19, 2019 அன்று ஹவாய் மாநிலத்தின் தலைநகரான ஹானலூலுவில் முதன்முதலாகத் தமிழ்க் குடும்பங்கள் ஒன்றுகூடி பொங்கல் விழா கொண்டாடினர். தமிழ்நாடு அறக்கட்டளை பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் விழாவாகவும் இந்நிகழ்ச்சியை சுலோச்சனா - அருண் சோலையப்பன் தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர், முனைவர் சோமலெ சோமசுந்தரம், TNF வரலாறு மற்றும் அது தமிழகத்தில் செய்துவரும் கல்வி மற்றும் சமுதாயத் திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். உரையைக் கேட்ட, ஹானலூலுவில் எட்டாவது பயிலும் தமிழ் மாணவி தேஜாஸ்ரீ, தனக்குத் தமிழ்நாட்டில் சேவை செய்ய ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கயல்விழி ராஜேந்திரன் திருக்குறள் போட்டிகளை நடத்தினார். ஹவாயில் பல்லாண்டுகளாக வாழும் திருமதி சுந்தரி பாலா, திருமதி முல்லை அண்ணாமலை உள்படப் பலரும் இந்நிகழ்ச்சி, அறக்கட்டளை பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், மற்ற தமிழ்ர்களைச் சந்திக்க மிக நல்ல வாய்ப்பாகவும் இருந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com