அரங்கேற்றம்: மிருணாளினி
அக்டோபர் 6, 2018 அன்று, கலாபாரதி நாட்டியப் பள்ளியில், செல்வி மிருணாளினியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர்ட்லாண்டில் நாட்டிய இளந்தாரகைகளை உருவாக்கிவரும் திருமதி சிவகாமி வெங்காவிடம் பயின்றவர் மிருணாளினி கேஸ்கர். முத்துசுவாமி நட்டுவனாரின் நாதஸ்வர இசை மற்றும் சுவாமி ஊர்வலத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

மதுரை ஆர். முரளிதரன் இயற்றிய 'பிரணவஸ்வரூபன்' என்ற பாடலுக்கு அற்புதமாக ஆடினார் மிருணாளினி. தொடர்ந்து தஞ்சை நால்வர் இயற்றிய ஜதீஸ்வரத்துக்கு மிருணாளினி ஆடியது அனைவரையும் கவர்ந்தது. அடுத்து, பெங்களூர் டி. ஸ்ரீனிவாஸின், "நீ கிருஷ்ண கமலதாரோ" பாடலில் கிருஷ்ணரின் பிறப்பு, வளர்ப்பு என அனைத்தையும் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. தஞ்சை சங்கர ஐயரின் "மஹாதேவ சம்போ" என்ற பாடலுக்குச் சிறப்பாக அபிநயித்தார். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக சந்த் ஏக்நாத்தின் மராத்திப் பாடல்மூலம் பண்டரிபுர விட்டலர் ஆலய யாத்திரைக்கு நம்மை அழைத்துச் சென்றார். லால்குடி ஜெயராமனின் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

மிருணாளினி தமது நிறைவுரையில், இறைவன், குரு, இசை வல்லுநர்கள் அனைருக்கும் நன்றி கூறினார். நட்டுவாங்கம்: திருமதி சிவகாமி வெங்கா. வாய்ப்பாட்டு: ஸ்ரீவத்ஸ டேபுர். மிருதங்கம்: ஸ்ரீஹரி ரங்கஸ்வாமி. குழலிசை: ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ராமமிஸ்ரா என அனைவரும் சிறப்பாகச் செய்தனர்.

போர்ட்லாண்ட் ரோஜா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பாகப் பங்கேற்றுள்ள மிருணாளினிக்கு ஓவியம் வரைதல், பியானோ வாசித்தல் போன்ற பிற திறன்களும் உண்டு.

கிருஷ்ணவேணி அருணாசலம்,
போர்ட்லாண்ட்.

© TamilOnline.com