அரங்கேற்றம்: மீரா ரமேஷ்
அக்டோபர் 20, 2018 சனிக்கிழமை அன்று மாசசூஸெட்ஸ் நாட்டியமணி நடனப்பள்ளி மாணவி குமாரி மீரா ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆஷ்லேண்ட் உயர்நிலைப் பள்ளியில் நடந்தேறியது. மீரா, குரு ஸ்ரீதேவி அஜய் திருமலையின் சிஷ்யை ஆவார்.

நாட்டை ராகத்தில் "மஹா கணபதிம்" என்ற விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து புஷ்பாஞ்சலியில் நடராஜர், குரு, இசைக் கலைஞர்கள், வந்திருந்த பெரியோர்களின் ஆசியைக் கோரினார். விநாயகரைப் போற்றி ஹம்ஸத்வனி ராகத்தில் "வர வல்லப", தோடியில் ஸ்வர சொல்லுக்கட்டு கீர்த்தனைகளுக்கு அழகாக ஆடி மெய்மறக்கச் செய்தார்.

ஷண்முகப்பிரியாவில் பாபநாசம் சிவனின் "பார்வதி நாயகனே" கீர்த்தனையில் கண்ணப்ப நாயனாரின் சிவபக்தியைத் தத்ரூபமாக ஆடலில் வெளிப்படுத்தினார். சங்கராபரணத்தில் "சகியே" வர்ணத்தில் கஜேந்திரனுக்கு மோட்சமளித்த தன்னுடைய நாதனான வெங்கடேசப் பெருமானின் பிரிவுத் துயரத்தை அபாரமான முக பாவங்களுடன் ஆடி மெய்சிலிர்க்க வைத்தார்.

வர்ணத்தைத் தொடர்ந்து கண்ணனின் லீலைகளை "கோவிந்தன் குழலோசை" மற்றும் 'தேவர்நாமா' மூலம் நம் கண்முன் நிறுத்தினார். அன்னை ராஜராஜேஸ்வரியின் பெருமைகளை விவரிக்கும் ராகமாலிகைப் பாடலான "ஸ்ரீசக்ரராஜ" கீர்த்தனைக்கு மீராவின் அபிநயங்கள் அருமை. இறுதியாக, தனஸ்ரீ ராகத்தில் சுவாதித் திருநாளின் தில்லானாவும், அயிகிரி நந்தினியும் அற்புதமாக அமைந்தன.

மீராவின் பெற்றோர்களான ரமேஷ் மற்றும் புவனா, குரு ஸ்ரீதேவிக்கும், இசைக்கலைஞர்களுக்கும், துணை நின்ற நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றி பாராட்டி நிகழ்ச்சியை முடித்தார்கள். மீரா ரமேஷ் 'Gift of Health' என்ற லாபநோக்கற்ற தொண்டுநிறுவனத்திற்கு அன்று வந்த பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கினார்.

சாந்தி சோம்நாத்,
பாஸ்டன்

© TamilOnline.com