மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
நவம்பர் 22 முதல், டிசம்பர் 2ம் தேதிவரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் உள்ள ஓக்லேண்டுக்கும், மிச்சிகனில் உள்ள டெட்ராயிட்டுக்கும் வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமாக விளங்கும் அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன.

அம்மாவின் அமுதமொழிகளில் சில:
"மிகச் சிறந்த பக்திக்கு இலக்கணமாகத் திகழ்பவன் பிரஹலாதன். பிரஹலாதனைப் போல் சிறந்த சமர்ப்பணம் உள்ள வேறொரு பக்தனைக் காண முடியாது. நமது பக்தி, 'பார்ட் டைம்' பக்தியாகும். ஏதாவது தேவை ஏற்பட்டால் நாம் இறைவனை நினைப்போம். தேவைகள் தீர்ந்துவிட்டால் இறைவனை நினைத்துப் பார்ப்பதே இல்லை. நாம் விரும்பியது நடக்காமல் போய் விட்டாலோ நமது நம்பிக்கையை இழந்து விடுவோம். இதுவே நமது நிலை. ஆனால், எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் பிரஹலாதன் மனம் தடுமாறவில்லை. ஒவ்வொரு இடையூறு வந்தபோதும் அவனது நம்பிக்கை அதிகரிக்கவே செய்தது. இடையூறுகள் அதிகரிக்க அதிகரிக்க அவன் இறைவனின் பாதங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டான். அவனது சமர்ப்பணம் அவ்வளவு உறுதியாக இருந்தது. அதன் பலனாக உலகிற்கே ஒளி வழங்கும் தீபமாக அவன் மாறினான். பிரஹலாதனின் வாழ்வும், பக்தி பாவமும் இன்றும் ஆயிரக்கணக்கானோரின் இதயங்களுக்கு ஒளி வழங்குகின்றன."

அம்மாவின் பொதுநலத் தொண்டு பற்றி அறிய: www.embracingtheworld.org
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com