தானவீர கர்ணன்
ஒருநாள் கர்ணன் குளிப்பதற்கு முன்னதாக உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். வைர, வைடூரியக் கற்கள் பதித்த தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. வலது உள்ளங்கையில் எண்ணெயை எடுத்து அவன் தலையில் அழுந்தத் தேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கே ஸ்ரீகிருஷ்ணர் வந்தார். கர்ணன் மரியாதையாக எழுந்து நின்றான். எண்ணெய்க் கிண்ணத்தை அன்பளிப்பாகப் பெறுவதற்காக வந்திருப்பதாக அவனிடம் கிருஷ்ணர் கூறினார்.

"பிரபஞ்ச நாயகனான நீ இந்த அற்ப விஷயத்துக்கு ஆசைப்படுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதைக் கேட்க நான் யார்? இதோ இந்தக் கிண்ணத்தைப் பரிசாகத் தருகிறேன்" என்று கூறியபடி, கர்ணன் தனது இடதுகையால் எடுத்து அதைக் கிருஷ்ணரின் வலதுகையில் கொடுத்தான்.

இடக்கையால் தர்மம் கொடுப்பது தவறு என்று கிருஷ்ணர் அவனைக் கடிந்துகொண்டார். "ஓ பிரபு! என்னை மன்னியும். என் வலக்கை எண்ணெயாக இருக்கிறது. ஒருவேளை தானம் கொடுக்கும் பொருட்டு நான் என் கையைக் கழுவிக்கொண்டு வந்தால், அந்த நேரத்துக்குள், தானம் கொடுக்கத் தயாராக இருக்கும் என் மனது, உமக்குக் கொடுக்காமலிருக்க ஏதாவது சாக்குக் கண்டுபிடித்து விடுமோ என்று நான் அஞ்சினேன். சஞ்சலமான என் மனது இந்த அரிய பாக்கியத்தைப் பெறவிடாமல் தடுத்துவிடலாம். அதனால்தான் சாஸ்திர சம்மதம் இல்லாவிட்டாலும் உடனடியாக நான் இடக்கையால் அதைக் கொடுத்தேன். என்மீது இரக்கம் கொண்டு என்னை மன்னித்துவிடும்" என்று வேண்டிக்கொண்டான் கர்ணன்.

சஞ்சலம் கொண்டது மனம் என்பது கர்ணனுக்குத் தெரியும். ஆனால், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்தபடி, பற்றின்மை மற்றும் கட்டுப்பாடு இவற்றால் மனதை வழிக்குக் கொண்டுவர முடியும்.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com