தேசிய ஆசிய இந்தியர் நாட்டிய மாநாடு 2005
இந்தியப் பண்பாட்டு மரபுவழி அறக் கட்டளையும், டல்லஸ் ஆரதி நாட்டியப் பள்ளியும், இணைந்து தேசிய ஆசிய இந்திய நாட்டிய மாநாடு 2005 ஐ ஜூலை 22 முதல் 24 வரை டெக்சாஸ் மாநிலத்தில் ரிச்சர்ட்சன் நகரில் உள்ள ஐஸ்மன் மையம், மற்றும் டல்லஸ் நகர் அரங்குகளிலும் நடத்தின. அறக்கட்டளை தன் பத்தாவது ஆண்டு விழாவையும், நாட்டியக் கலைஞர் ரேவதி சத்யு தொடங்கிய ஆரதி நாட்டியப்பள்ளி தனது 25வது ஆண்டு விழாவையும் கொண்டாடின.

இதன் நோக்கங்கள் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், ஒடிஸ்ஸி, மற்றும் நாட்டுப்புற இந்திய நாட்டியங்களைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், கலை விருந்தினர்கள் மூலம் பண்பாட்டுப் பிணைப்புத் தாக்கங்களுக்கு வழி செய்தல் மற்றும், டல்லஸ் நாட்டியக் குழு வழியாக பரதநாட்டியம் பயில உதவித்தொகை வழங்குதல் என்பன.

தலைமை விருந்தினரும் புகழ்பெற்ற கலைஞருமான வைஜயந்திமாலா பாலி குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூத்த கலைஞர்களான சாந்தா மற்றும் வி.பி. தனஞ்சயன், சென்னை, கமலா லக்ஷ்மன், நியூ யார்க், பத்மினி ரவி, பெங்களூர், மற்றும் லெஸ்லி ·ப்ரீட்மன், கலி·போர்னியா. மாநாட்டுக்கு வந்த 3000 பேரில் வெளியூரிலிருந்து வந்தவர்கள் 500 பேர். நூறு மாணவ மாணவிகள் வகுப்பு களுக்குப் பதிவு செய்திருந்தனர்.

வைஜயந்திமாலா பரதநாட்டியத்தைப் பற்றி விளக்கிப்பேசும்போது பண்டைய கோவில் நடன முறைகளைப் பற்றிய தன் ஆராய்ச்சியையும் குறிப்பிட்டார். தனஞ்சயன் தம்பதியினர் 150 முறை அமெரிக்காவில் அரங்கேறியுள்ள தங்கள் "ருத்யார்டு கிப்ளிங்கின் ஜங்கிள் புக்" நிகழ்ச்சியில் பரதநாட்டியத்துடன் பேல்லே நடன முறைகளை இணைத்தது பற்றிப் பேசினார்கள். கமலா லக்ஷ்மண் தனது சிறப்பு நடன வழியான வழுவூர் சப்த முறையை ஆடிக் காட்டினார். ஸ்டான்·போர்டு பல்கலைக் கழக வரலாற்று அறிஞரும், ·புல்பிரைட் கல்விமானும், புகழ் பெற்ற பேல்லே நாட்டிய விற்பன்னரும் ஆகிய முனைவர் லெஸ்லி ·ப்ரீட்மன் தான் வடிவமைத்த சில நாட்டியங்களையும் அதில் இந்திய நாட்டியம் மற்றும் கலையின் தாக்கத்தைப் பற்றியும் பேசினார்.

மாலையில் நடந்த நடன நிகழ்ச்சிகளில், ஆரதி நாட்டியப் பள்ளியின் புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து டல்லஸ் கருப்பர் நாட்டிய அரங்கு, டானியல் டி கோர்டோபா (·ப்லமென்கோ), ஸாண்டுங்கா (ரும்பா), மற்றும் ஹிப் ஹாப் குழு வினரின் குறு நடன நிகழ்ச்சிகள் கலவை இசையுடன் அரங்கேறின. டல்லஸ் மற்றும் ·போர்ட்வர்த் நகரங்களிலிருந்து ஆறு நாட்டியப் பள்ளிகள் ஒருங்கிணைந்து பெங்களூர் பத்மினி ரவி வடிவமைத்த "சோகம்" என்ற நாட்டியத்தை அரங்கேற்றினர்.

இரண்டாம் நாளன்று புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர்களான பிரியதர்சினி கோவிந்த், மற்றும் நடிகை ஷோபனா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பெங்களூர் கதக் தம்பதியர் நிருபமா மற்றும் ராஜேந்திராவின் பேல்லே போன்ற நாட்டியம் மக்களைக் கவர்ந்தது. கலி·போர்னியா ரமா பரத்வாஜின் அங்கஹாரா நாட்டியப் பள்ளியின் பொம்மலாட்டம் குழந்தைகளை மகிழ்வித்தது.

இறுதி நாளன்று ஹ¥ஸ்டன் அஞ்சலி நாட்டியப் பள்ளியின் ரத்னா குமார் வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண பாரிஜாதம், ஆரதி நாட்டியப் பள்ளியின் ஆஷா கோபால் வழங்கிய "சாக்ஷ¢" என்ற நாட்டுப்புற நடனம், சான் அன்டோனியோ ஆரதி நாட்டியப்பள்ளியின் டாக்டர் ராஜம் ராமமூர்த்தி வழங்கிய தசாவதாரம், நிகழ்ச்சிகளுக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது ரேவதி சத்யு வழங்கிய டல்லஸ் ஆரதி நாட்டியப் பள்ளியின் முன்னாள் மாணவிகளின் "மங்களம்".

தகவல்: விமலா ரங்காச்சார்,
டல்லஸ், டெக்சாஸ்

© TamilOnline.com