கீதா ராமனாதன் பென்னட் வீணைக் கச்சேரி
ஸான் டியாகோ சிவா-விஷ்ணு கோயிலில் ஜூன் 25ம் தேதி கீதா ராமனாதன் பென்னட் அவர்களின் வீணைக் கச்சேரி சங்கீத வட்டத்தினரால் (music cirlce) ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நெய்வேலி நாராயணன் அவர்கள் மிருதங்கமும், மஹேஷ் சிதம்பரா கடமும் பக்கவாத்தியங்கள் வாசித்தனர்.

கச்சேரியின் ஆரம்பமாக அழகான வேகத்துடன் சஹானா வர்ணமும் அதைத் தொடர்ந்து பஞ்சமாதங்கா என்ற தீட்சிதரின் மலஹரி ராக சாஹித்தியமும் வாசிக்கப் பட்டன. நாட்டகுறிஞ்சி ராகத்தில் சுப்பிரமணிய பாரதியாரின் படைப்பான முருகா முருகா என்ற பாடலை மிக அழகாக வாசித்ததுடன் அருமையாக ஒன்று சேர பாடப்பட்டது மிக இனிமையாக இருந்தது. பூர்விகல்யாணியில் செய்த ஆலாபனை மிக மகிழ்ச்சியூட்டும் வகையில் இருந்தது. இதைத் தொடர்ந்து ச்யாமா சாஸ்திரிகளின் நின்னுவினா என்ற பாடல் இசைக்கப்பட்டது.

டாக்டர் எஸ். இராமனாதன் அவரிகளின் சாகித்தியமான பாவப்ரியே என்ற பவானி இராக பாடல் நெஞ்சைத் தொட்டது.

கீரவாணி இராகத்தில் பாடிய தியாக ராசரின் கலிகி யும்டே கதா என்ற கீர்த்தனம் கச்சேரியின் முக்கியமானதாக அமைந்தது. விரிவானதும் அற்புதமானது மான ஆலாபனையைத் தொடர்ந்து அதற்கு இணையான அருமையான தான மாலிகாவும் அமைந்தது.

நல்ல கமகத்துடனான, முகபாவத்துடனும் கைகளினால் வீணையை வாசித்த பாங்கும் அழகும் அரங்கில் உள்ள இரசிக பெருமக்கள் பலரை மெய்மறக்கச் செய்தது.

நெய்வேலி நாராயணன் அவர்களும், மஹேஷ் சிதம்பரா அவர்களும் வாசித்த தனி ஆவர்த்தனம் மிக உன்னதமாக அமைந்ததால் அரங்கம் மிக்க மகிழ்ச்சி அடைந்தது.

எப்போவருவாரோ என்ற கோபால கிருட்டின பாரதியின் ஜோன்புரி இராக பாடல், யாதவராய என்ற கனகதாசரின் இராகமாலிகை, கமாஆ இராகத்தில் ஜாவளி என்று சில பாடல்கள்(துக்கடா) இதனைத் தொடர்ந்து முழுமையான பாவத்துடனும் (Bhavam) இனிமையாகவும் வாசிக்கப்பட்டன.

இந்தக் கச்சேரியின் இறுதியாக லால்குடி ஜெயராமன் அவர்களின் சாகித்தியமான மிஸ்ர மாண்டு இராகத்தில் தில்லானா இசைக்கப்பட்டது. இந்தக் கச்சேரியில் நிறைய சிறுவர் சிறுமியர் இறுதிவரை உட்கார்ந்து கேட்டதுடன் தாளத்தையும் தப்பாமல் போட்டுக்கொண்டிருந்ததை சபையினர் கண்டிப்பாக கவனித்திருப்பர். ஸான் டியாகோவின் கோவில் மற்றும் சங்கீத வட்டாரத்தினர் நமது சமூகத்திற்கும் நமது தலைமுறையினருக்கும் செய்கின்ற சேவைக்கு இதுவே அத்தாட்சியாகும்

மதுகர் சிதம்பரா
தமிழாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com