தொடுவானம்
வரும் செப்டம்பர் 17ம் தேதி, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம், தில்லானா இன்னிசைக் குழு, புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான உதவியமைப்பு ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து 'தொடுவானம்' என்ற ஒரு மாபெரும் இன்னிசை, நடன நிகழ்ச்சியை அளிக்க இருக்கிறார்கள். சென்னை அடையாறில் அமைந்துள்ள புற்று நோய் ஆராய்ச்சிக் கழகத்திற்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் தமிழ் மன்றம், தில்லானா வின் 'தொடுவானம்' இன்னிசை நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது வளைகுடாப் பகுதி தமிழன்பர்களின் ஏகோபித்த ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற புகழ்பெற்ற தில்லானா இசைக்குழு பல இசை நிகழ்ச்சிகளை இப்பகுதியில் வழங்கியுள்ளது. நிகழ்ச்சியில் தில்லானாவின் பிரபல கலைஞர்கள் பங்கு கொள்ளும் நடனங்கள், பிரபலமான பல பாடல்கள் நிறைந்து மிக அருமையான ஒரு பொழுது போக்கு அனுபவத்தை அளிக்க இருக்கிறார்கள்.

அடையாறில் அமைந்துள்ள புற்று நோய் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மருத்துவமனை, 1955ம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற தொண்டுள்ளம் நிறைந்த மருத்துவ ரால் தொடங்கப் பெற்றது. அவர் புற்று நோய் மருத்துவத்துக்கென்று மட்டுமே தனியாக ஒரு மருத்துவமனை வேண்டும் என்ற அவசியத்தினை உணர்ந்து இரண்டு படுக்கைகளுடன் இந்த மருத்துவமனையைத் துவக்கினார். அன்னாரின் உயர்ந்த லட்சியங்களின் காரணமாகவும், தொலை நோக்கின் விளைவாகவும் இந்த அந்த மருத்துவமனை ஓர் ஆராய்ச்சி நிலையமாகவும், சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் உட்பட பல தரப்பட்ட மக்களின் புற்று நோய் தடுப்புக்கும், சிகிச்சைகளுக்கும் உரிய ஒரு பெரிய மருத்துவ நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. அடையார் புற்றுநோய்க் கழகம் மட்டுமே இன்றுள்ள ஒரே லாப நோக்கில் அமையாத ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை அளித்து வரும் தன்னாட்சி மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையம் புற்று நோயை பல முனைகளிலும் எதிர் கொள்ளும் ஒரு பன்னோக்கு நிறுவனமாக வும், நோய் தடுப்பு, கண்டுபிடிப்பு, சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாகவும், புற்று நோய் சம்பந்தமான ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையமாகச் செயல்பட்டு வருகிறது.

அடையாறு புற்று நோய் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மருத்துவமனை பின்வரும் உயரிய நோக்கங்களுடன் செயல்பட்டு வருகின்றது.
1. ஏழை எளிய மக்களிடம் சென்று இந்த பயங்கர நோயின் ஆரம்ப கால அறிகுறியைக் கண்டறிய உதவுவது
2. அனைத்து நோயாளிகளுக்கும் இந்த நோய்க்குத் தற்கால மருந்து மற்றும் சிகிச்சை வசதிகளை அளிப்பது. அதில் 60% நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்குவது.
3. கிராமப் புறங்களில் உள்ள பெண் செவிலியர்களிடமும், சுகாதாரப் பணியாளர்களிடம் இந்த நோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவர்களுக்கு நோயின் ஆரம்ப அறிகுறி களைக் கண்டறியத் தேவையான பயிற்சியினை அளித்தல். பொது மக்களிடம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு செல்லுதல்.
4. புகையிலை மற்றும் புகைபிடித்தலில் உள்ள அபாயங்களை உணர்த்துவது, அவற்றைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்துதல்

இத்தகைய உயர்ந்த நோக்கங்களுடன் செயல்படும் இம் மருத்துவமனையின் ஆராய்ச்சிப் பிரிவு புற்று நோய் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மருத்துவக் கழகத்தில் அளிக்கப்படும் மருத்துவப் படிப்புகள் இந்தியாவின் பல்வேறு மருத்துவ அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையத்தில் M.h, D.M, PhD, M.Sc, M.D போன்ற பல மருத்துவ மேற்படிப்புக்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய மேன்மையான கொள்கை களுடன், பொதுமக்களின் நோய்த் துயர் துடைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்த புற்று நோய்க் கழகமானது, முழுக்க முழுக்க ஒரு தன்னாட்சி அமைப்பாகவே செயல் பட்டு வருகிறது. ஆகவே இந்த மருத்துவ அமைப்பின் தொடர்ச்சிக்காகவும், அவர்களது உன்னத செயல்பாடுகளின் நோக்கத்திற்காகவும் ஆண்டுதோறும் பெரும் அளவு நிதித் தேவை இருந்து கொண்டே வருகிறது. அந்த மையத்திற்கு உதவி செய்யும் நோக்கத்துடன் தன்னார்வத் தொண்டர்களின் முயற்சியினால் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ·பவுண்டேஷன் என்ற அமைப்பு செயலாற்றி வருகிறது.

நிகழ்ச்சி விபரம்:

நாள்: செப்டம்பர் 17,
பிற்பகல் 5:30 மணி
இடம்: Smithwick Theatre,
Foothill College, Los Altos.
கட்டணம்: $15, $20 (நன்கொடையாளர்களுக்கு சிறப்பு இடம் பதிவு செய்யப்படும்)

மேற்கொண்டு விவரங்களுக்குக் காண்க:
www.bayareatamilmanram.org
www.cifwia.org
www.thillana.net

© TamilOnline.com