BATM: மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கம்
செப்டம்பர் 8, 2018 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ஃப்ரீமான்ட்டில், மாணவர்களைக் கல்லூரிக்கு தயார்படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. கல்லூரியில் சேரவிருக்கும் இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு, மேற்படிப்பிற்கான வாய்ப்புகள், பொருளாதார, சமூக, மனோரீதியான வழிகாட்டலுக்கென இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தக் கருத்தரங்கைத் தமிழ் மன்றம் நடத்தி வருகிறது.

நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியாக, கல்லூரி நுழைவுத்தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் Live Tutor நிறுவனர் ஆனந்த் சுப்ரமணியன், தருண் மற்றும் பிறர், AP, SAT, ACT போன்றவற்றுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

புகழ்பெற்ற டீனாலஜிஸ்ட் டாக்டர் பெர்த் ஹால்பெர்ட் வழங்கிய, பதின்பருவ மாணவர்களின் சமூக, உளவியல் ரீதியான மாற்றங்கள் மற்றும் தேவைகள், அந்தப் பருவத்திலிருக்கும் மாணவர்களின் பெற்றோர் செய்யவேண்டியவை குறித்த உரை, மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. Trans America நிறுவனத்தைச் சேர்ந்த நிதி திட்டமிடல் வல்லுநர், கல்லூரிக் கட்டணம், சேமிப்பு மற்றும் நிதி முதலீடுகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் குறித்து விவரித்தார்.

முத்தாய்ப்பாக, கல்லூரி மாணவர்கள் குழு பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திறமையான மற்றும் வெற்றிகரமான நான்கு கல்லூரி மாணவர்கள் அனிருத், நிலா, பிரசன்னா மற்றும் ஷிராந்தி, தாங்கள் கல்லூரியில் சேர எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் அனுபவங்கள் குறித்துப் பேசினர். உயர்நிலைப் பள்ளிக் கல்வியின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த குறிப்புகளைப் பகிர்ந்துகொண்ட அவர்கள், அப்படிப்பட்ட மாணவர்களைக் கல்லூரிகளும் விரும்புகின்றன என்றதோடு, அது பின்னாளில் வாழ்வில் வெற்றியடையவும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

கருத்தரங்கு தமிழ் மன்ற நிர்வாகிகள் சார்பாக நன்றி நவிலலுடன் நிறைவடைந்தது.

ரமேஷ் குப்புசாமி,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com