அரங்கேற்றம்: அநாமிகா கண்ணன்
ஆகஸ்டு 11, 2018 அன்று செல்வி அநாமிகாவின் வாய்ப்பாட்டுக் கச்சேரி கேம்ப்பெல் ஹெரிடேஜ் அரங்கத்தில் (கேம்ப்பெல், கலிஃபோர்னியா) சிறப்பாக நடந்தேறியது. தோடியில் ஆதிதாள வர்ணத்தோடு கச்சேரியை ஆரம்பித்தார். அடுத்து நாட்டையில் நாராயண தீர்த்தரின் "ஜய ஜய சுவாமின்" என்கிற கீர்த்தனையில் தனது குரல்வளத்தை அழகுற வெளிக்காட்டினார். விஜயசரஸ்வதி ராகத்தில் இவர் பாடிய முத்தையா பாகவதரின் பாடல் இது அரங்கேற்றம் என்ற எண்ணத்தை மறக்கடித்தது. பக்க வாத்தியக்காரர்களுடன் கேள்வியும் பதிலுமாகப் பாடிய சிட்டைஸ்வரம் பிரமாதம். மிக நேர்த்தியாக அபிநயம் பிடித்து அநாமிகா பாடும் விதம், இவர் நாட்டியப் பயிற்சியும் பெற்றவர் என்பதைக் காண்பித்தது. பஞ்சபூத விளம்ப கால கிருதியான "ஜம்புபதே"வை உருக்கமாகப் பாடினார்.

குரு திருமதி ஜயஸ்ரீ வரதராஜன் மோகன ராகத்தில் இயற்றிய "கங்காதரா"வில் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண வைத்தார். பின்பு பூர்விகல்யாணியில் தியாகராஜரின் "ஞான மொசகராதா" பாடலுக்கு விஸ்தாரமாக ஆலாபனை, நிரவல், மற்றும் ஸ்வர கல்பனை அழகாகச் செய்தார். 16 ராகங்களில் அமைந்த "சாரங்கன் மருகனே", கீரவாணியில் அமைந்த ராகம்-தானம்-பல்லவி எல்லாமே செவிக்கு விருந்து. மிருதங்கம் வாசித்த அமித், வயலின் வாசித்த ஸஹானா, தம்புரா வாசித்த நம்ரதா ஆனந்த் எல்லோரும் கச்சேரிக்கு வலுச்சேர்த்தனர். கீரவாணி கல்பனா ஸ்வரம், "ஹரி தும ஹரோ", வாசந்தியில் புரந்தரதாசர் கிருதி, பஸந்த் பஹார் தில்லானா எல்லாமே ஆனந்தம். அநாமிகா மங்களத்துடன் கச்சேரியை முடித்தார்.

ஸ்ரீராம லலித கலா மந்திர் கலைப்பள்ளி 35 வருடங்களாக எண்ணற்ற கலைஞர்களை உருவாக்கி உள்ளது. அந்த வரிசையில் அநாமிகா 'கான தீப்தி' என்கிற பட்டத்தோடு நல்வாழ்த்துக்களும் பெற்றார்.

தொகுப்பு: புவனா,
லாஸ் ஆல்டோஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com