சான் ஃபிரான்சிஸ்கோ: NIT திருச்சி மாணவர் மறுகூடல்
ஆகஸ்ட் 11, 2018 அன்று சான்ட க்ளாராவில் நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, திருச்சியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்தனர். இதற்கு இவ்வமைப்பின் இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் வருகை தந்தார்.

இந்தக் கல்லூரியை உலக வரைபடத்தில் முக்கியமான தொழில்நுட்பக் கல்லூரிகளுள் ஒன்றாகச் செய்வதிலும், உலகாளாவிய ஒரு 'பிராண்ட்' ஆகச் செய்வதிலும், முன்னாள் மாணவர்களின் பங்கு அதிகம் உள்ளதென அவர் வலியுறுத்திப்பேசினார். 1974ம் ஆண்டு தொடங்கி, 2017 வரை இங்கு படித்துப் பட்டம்பெற்ற 150க்கும் மேலானோர் இந்த மறுகூடலுக்கு வந்திருந்ததே இதன் வெற்றியை உறுதிசெய்தது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜா ரங்கநாதன் (1990 மாணவர்) 2016 ம் வருடத்தின் 'புகழ்பெற்ற முன்னாள் மாணவர்' விருதைப் பெற்றவர் ஆவார். துவக்கத்தில் 1979ம் வருட மாணவரான ராஜன் நாராயணன் மறைவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திரு கிருஷ்ணா சாய், (முன்னாள் மாணவர் சங்கத் தலைவர்) எவ்வாறு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பல ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் முனைப்பாக ஈடுபட்டுள்ளது என்பதை விளக்கினார். குறிப்பாக, 1990ம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட SCIEnT (Student Center for Innovation in Technology), 1981ம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட IoT Lab (Internet of Things), கல்லூரி வளாகத்துக்குள் துவக்கப்பட்ட நடுநிலைப் பள்ளி, தவிர 70க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் இவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் இக்குழு விரிவடைய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

திரு ராம்குமார் வாசுதேவன் (1974), திரு ரிச்சர்ட் சேகர் (1983), திருமதி தீபா பால்கி (1991) ஆகியோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

திருமதி டாக்டர் மினி தாமஸ், NIT ஒரு வலிமைமிக்க புதுக்கண்டுபிடிப்புகளின், ஆராய்ச்சிகளின் இருப்பிடமாக மாறுவதற்கான தன்னுடைய கனவை, எதிர்காலம் நோக்கிய பார்வையைப் பகிர்ந்துகொண்டார். எரிக்ஸன் நிறுவனத்தில் பணிபுரியும் இணைப்பில்லாத் தொடர்பு தொழில்நுட்பத்தின் வித்தகர் திரு குமார் பாலசந்திரனுக்கு (1986), புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதை வழங்கினார். நேரம், திறமை, முதலீடு என்ற மூவகையிலும் முன்னாள் மாணவர்களின் பங்கேற்பு இருக்கவேண்டுமெனக் கூறினார். அவர்களுடன் உரையாடலுக்காகத் தனி நிர்வாகக் குழுவுடனான அமைப்பொன்றைத் துவங்கியிருப்பதையும் கூறினார்.

ஆக, மறுகூடல் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பாக மட்டுமின்றி, பல புதிய தீர்மானங்களோடும், உலகளாவிய பிராண்டாக என்.ஐ.டி., திருச்சியைச் செலுத்தும் உறுதியோடும் நிறைவுற்றது.

பட்டம் பெற்று வரும் மாணவர்கள் கீழ்க்காணும் முன்னாள் மாணவர்களுக்கான இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்: nittrichyalumni.org

ராஜா ரங்கநாதன்,
சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா

© TamilOnline.com