துணை நகரம்!
அதிகரித்து வரும் சென்னை நகர மக்கள் தொகையை மனதில் கொண்டு புதிய துணை நகரம் ஒன்றை சென்னைக்கு அருகாமையில் உருவாக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். துணை நகரம் வண்டலூர் - கேளம்பாக்கத்திற்கு தெற்கே அமைக்க விருக்கிறது என்றும் சட்டப்பேரவையிலேயே அறிவித்தார். துணை நகரத்திற்காக 44 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன.

துணைநகரம் அறிவிப்பு வருவதற்கு முன்பே இத்திட்டத்தை தி.மு.க கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க எதிர்க்கத் தொடங்கியது. குறிப்பிட்ட 44 கிராமங்களில் உள்ள மக்களை திரட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டது. தொடர்ந்து ஏழைகளும், சிறுவிவசாயிகளும் இதனால் பாதிக்கப்படுவார்கள். இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோ ம் என்று எதிர்ப்பு குரல் கொடுத்தது. பாதிக்கப்பட்ட கிராமமக்கள் இதுதொடர்பாக சென்னை தலைமைசெயலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு ஒன்றை அளித்தனர்.

இதற்கிடையில் சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி பயிரிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலங்கள், மற்றும் நீர் நிலைகள் இந்த துணை நகரத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில் இப்பிரச்சனையை சட்டப் பேரவையில் அ.தி.மு.கவும் எழுப்பியது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது அறிக்கையை முதல்வர் சட்டப்பேரவையில் வாசிக்க முற்பட்டப் போது அ.தி.முக. சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழிநடப்பு செய்தனர்.

கூட்டணி கட்சியின் நிர்ப்பந்தம் மற்றும் அ.தி.மு.கவின் கடும் எதிர்ப்பை அடுத்து துணை நகரம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com