பகுத்தறிவு
நீந்தித் திரியும் மீன்கள்
ஆழத்தைக் குறித்து
ஆலோசிப்பதில்லை...

சிறகுகள் தொடும்
உயரங்களை
பறவைகள் அளப்பதில்லை ...

கொன்று குவித்த
மானின் கணக்கு
சிங்கத்தின் சிந்தையில்
சேர்வதில்லை..

தாவித்திரியும்
அணில்கள்
கிளைகளின்
தன்மை குறித்து
தர்க்கம் புரிவதில்லை ...

இரையை
இணையை
விடவும்
பெரிதாய் எதுவும்
பொருட்டாவதில்லை..

பகுத்தறிந்து
பாரபட்சமாக்க
நல்லவேளை
இவைகளுக்கு
ஆறாம் அறிவில்லை...

அருணா சுப்ரமணியன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com