மினசோட்டா: சித்திரை தமிழிசை விழாவில் புஷ்பவனம் குப்புசாமி
ஏப்ரல் 29, 2018 அன்று மினசோட்டா தமிழ்ச் சங்கம், கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமி, திருமதி. அனிதா குப்புசாமி ஆகியோர் பங்கேற்ற சித்திரைத் தமிழிசை விழாவைச் சிறப்புற நடத்தியது.

29ம் தேதி மாலையில் குழந்தைகள் பங்கேற்ற 'மலரும் மொட்டும்' நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அனிதா அழைக்க, குழந்தைகள் மாறுவேடமிட்டு வந்து மழலைத் தமிழில் தமது வேடத்தை விவரித்து கைதட்டலை அள்ளினர். விவசாயி, பாரதி, தமிழ்த்தாய், அம்பேத்கார், மாம்பழம், வண்ணப் பலூன் மற்றும் பல கண்கவர் வேடங்களில் அவர்கள் தோன்றினர்.

"தமிழே உயிரே வணக்கம்" என்ற தமிழ் வாழ்த்துப் பாடலுடன் புஷ்பவனம் குப்புசாமியின் வெண்கலக் குரலில் இசைநிகழ்ச்சி தொடங்கியது. கிராமியக் கும்மி, காதல்பாடல், தத்துவப்பாடல், தமிழிசை, தெய்வப்பாடல், செவ்விசை, திரையிசை, வாழ்வியல் பாடல் என்று பல பரிமாணங்களில் பாடல்களை வழங்கினர். விடுகதைப் பாடல்கள், குழந்தைகளை ஆட்டம் போடவைத்த பாடல்கள் எல்லாம் அமர்க்களம். பாடலின் இடையிடையே அந்தப் பாடலின் சிறப்பு, தமிழ்ப் பண்ணின் பெயர் என்று பல தகவல்களைக் கூறியது சிறப்பு.

மினசோட்டாத் தமிழ்ப் பள்ளியில் வாரயிறுதியில் தன்னார்வப் பணி புரியும் ஒன்பது ஆசிரியர்கள், தமிழியல் பட்டத்தினைப் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் கரத்திலிருந்து பெற்றுக்கொண்டனர். இவர்கள் மினசோட்டாவிலிருந்தபடியே தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டத் தேர்வெழுதிப் பெற்ற இரண்டாமாண்டுப் பட்டமாகும் இது.

தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேடையேறி புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்குத் 'தமிழிசை வேந்தர்' பட்டத்தை வழங்கி, தலைப்பாகை சூட்டி அழகு பார்த்தனர். திருமதி அனிதா குப்புசாமிக்கு 'மக்களிசை குயில்' என்ற பட்டத்தை வழங்கிப் பெருமைப்படுத்தியது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த வீணையிசைக் கலைஞரும், பாடகருமான திருமதி நிர்மலா ராஜசேகர் மற்றும் கொடையாளரும், முனைவருமான திரு டேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

வழிப்போக்கன்,
மினசோட்டா

© TamilOnline.com