பாஸ்டன்: காயத்ரி மகாயக்ஞம் நிறைவு
பாஸ்டன் அருகே நாஷுவாவில் அமைந்துள்ள நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில், சுமார் இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து நடந்துவரும் தசலட்ச காயத்ரி மகாயக்ஞம் மே 20, 2018 அன்று பூர்த்தியடைந்தது. செப்டம்பர் 2016ல் தொடங்கி, ஒவ்வொரு சனி ஞாயிறு காலையும் ரித்விக்குகள், புனித காயத்ரி மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை உச்சரித்து உலக நன்மையை வேண்டி அக்னியில் வேள்வி நடத்தினார்கள். மொத்தம் பத்து லட்சம் முறை காயத்ரி ஜபிக்கப்பட்டது. யாகத்தில் வயது வித்தியாசமில்லாமல் பலர் கலந்து கொண்டனர்.

மந்திரங்களிலே காயத்ரி மந்திரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. பகவத் கீதையில் பரந்தாமன் "காலங்களில் நான் வசந்தம், மந்திரங்களில் நான் காயத்ரி" என்று உரைக்கிறார். காயத்ரி மந்திரத்தை மகாகவி பாரதியார் எல்லோருக்கும் எளிதாகப் புரியும்படி "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம், அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக" என்று அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். அறிவாற்றல் வேண்டி இறைவனைத் தியானிக்கும் அனைவர்க்கும் பொதுவான பிரார்த்தனை காயத்ரி மந்திரம் என்பது பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் விளக்கம்.

இரண்டு வருட காலம் ஆலயத்தில் காயத்ரியைப் பத்து லட்சம் முறை ஒலிக்கக் செய்தது, காஞ்சி மகாப் பெரியவரின் அருள்தான் என்கிறார் ஆலய நிறுவனர் திரு வீரமணி ரங்கநாதன்.

மேலும் அறிய

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com