தெரியுமா?: சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 2019
தவத்திரு தனிநாயக அடிகளார் 1966ம் ஆண்டு தொடங்கி வைத்து, 1968ம் ஆண்டு அறிஞர் அண்ணா சிறப்பாகச் சென்னையில் நடத்தியது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. அது தொடர்ந்து பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், மொரீஷியஸ், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டது. அடுத்து திருவள்ளுவர் ஆண்டு 2050, ஆனித் திங்களில் (2019 ஜூலை 3-4) சிகாகோவில் நடைபெற உள்ளது.

உலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டைச் சிறக்கச் செய்ய அனைவரின் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் அன்போடு வேண்டுகிறோம்.

உலகெங்கிலும் தமிழ்ப்பணி ஆற்றிவரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து, தமிழாராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் கூடிய நோக்கோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்ச் சங்கப் பேரவை விழா, மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளன. தமிழை முதன்மைப் படுத்தி, அரசியல் கலப்பின்றி நடைபெறவிருக்கும் இம் மாநாட்டிற்குத் தமிழியல் ஆய்வில் இன்றைய அளவில் பெரும்பங்கு வகிக்கும் பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்கவிருக்கின்றனர்.

அமெரிக்காவாழ் தமிழர்கள், உலகத் தமிழர்கள், உலகத் தமிழ் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் வெற்றி விழாவாக இம்மாநாடு அமைய உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும் எதிர்நோக்குகின்றோம். தமிழ்ச் சங்கங்கள் தமது கருத்துக்களை ideasforiatr2019@fetna.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம். உங்கள் பங்களிப்பும் தமிழ்த்திறனும் எங்கே நன்கு சிறப்புறும் என்பதையும் தெரிவிக்குமாறு வேண்டுகின்றோம்.

விழா ஒருங்கிணைப்புக் குழுவினர்

© TamilOnline.com