இலவச கலர் டிவி மற்றும் இலவச நிலம் வழங்கல்!
தி.மு.க தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ரேஷன் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவாசயிகளுக்கான கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளை நிறை வேற்றியது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச கலர் டிவி மற்றும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் போன்ற வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் படிபடியாக நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். மேலும் அவர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று இலவச கலர் டிவியும், சமூக சீர்த்திருத்தவாதி தந்தை பெரியார் பிறந்த நாளில் இரண்டு ஏக்கர் நிலமும் முதல் கட்டமாக வழங்கப்படும் என்றார்.

இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்திற்கான டிவிக்காக உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதற்கான பணிகள் வேகமான நடைப்பெற்று வருகின்றன. அதைப் போல் இலவச நிலங்களுக்கான கணக்கெடுப்புகளும் நடைப்பெற்று வருகின்றன.

முக்கிய வாக்குறுதியான இலவச கலர் டிவி, முதல்கட்டமாக சமத்துவபுரங்களில் வசிப்பவர் களுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதனை அடுத்து சுமார் 30 ஆயிரம் தொலைக்காட்சிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் துண்டல்கழனி சமத்துவபுரத்தில் இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஆண்டு தோறும் 25 லட்சம் கலர் டிவிக்கள் என ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஒரு கோடி கலர் வழங்க அரசு திட்டமிட்டிருப்பதாக விழாவில் முதல்வர் தெரிவித்தார்.

இதே போல் நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாளன்று தொடங்கி வைத்தார். முன்னதாக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில், 23 ஆயிரம் ஏழைகளுக்கு சுமார் 26 ஆயிரம் ஏக்கர் நிலம் இலவசமாக முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்டது.

இதற்கிடையில் பல ஆண்டுகளாகபுறம் போக்கு நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கு நிலப் பட்டா அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங் களைவிவசாயிகள் நடத்தினர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com