எம்.எஸ். ராஜேஸ்வரி
"மஹான் காந்தி மஹானே...", "உன்னை உன் கண் ஏமாற்றினால்..", "துன்பம் நேர்கையில்..", "புது பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே..", "மண்ணுக்கு மரம் பாரமா..", "மியாவ், மியாவ் பூனைக்குட்டி", "கோழி ஒரு கூட்டிலே..", "சின்னப் பாப்பா எங்கள் செல்லப் பாப்பா..", "சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா..", "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.." போன்ற காலத்தால் அழியாத பாடல்களுக்குக் குரல் கொடுத்த எம்.எஸ். ராஜேஸ்வரி (87) சென்னையில் காலமானார். சடகோபன் - ராஜசுந்தரி தம்பதியினருக்கு 1931ல் பிறந்தவர் ராஜேஸ்வரி. தாய் நாடக நடிகை. கிராமஃபோன் இசைத் தட்டுக்களுக்காகவும் பாடி வந்தார். அந்தச் சூழலில் வளர்ந்த ராஜேஸ்வரிக்கு இசையின்மீது இயல்பிலேயே அதிக ஆர்வம் இருந்தது. 'ஸ்டார் கம்பைன்ஸ்' நிறுவனத்தில் பின்னணிப் பாடகியாகச் சேர்ந்தார். அதுவே முதல் பட வாய்ப்பிற்கு வழிவகுத்தது. 1946ல் வெளியான 'விஜயலட்சுமி' படத்தில் கதாநாயகிக்குப் பின்னணி பாடினார். அப்போது ராஜேஸ்வரிக்குப் பன்னிரண்டு வயது. தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. எவி. மெய்யப்பச் செட்டியாரின் 'நாம் இருவர்' திரைப்படம் இவருக்குத் திருப்புமுனை ஆனது. அதில் இடம்பெற்ற "கருணாமூர்த்தி காந்தி மகாத்மா..", "மஹான் காந்தி மஹானே..." என்ற பாடல்கள் பரவலாகப் பேசப்பட்டன. இளமை பொங்கும் தனது புதுமைக் குரலால் திரையுலகில் பின்னணிப் பாடகியாக நிலைபெற்றார் ராஜேஸ்வரி. எம்.கே. தியாகராஜ பாகவதர் துவங்கி, டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம். ராஜா, கே.ஜே. ஏசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எனப் பலருடன் இணைந்து பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 500 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் ராஜேஸ்வரி, தனது குழந்தைக் குரலுக்காக ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவர். 'துள்ளி ஓடும் புள்ளிமான்' என்ற படத்தைத் தயாரித்ததில் ஏற்பட்ட நஷ்டம் அவரது வாழ்க்கையை வெகுவாகப் பாதித்தது. சில மாத காலமாகவே கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றிக் காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மகன் ராஜ் வெங்கடேஷ் பாடகர்.



© TamilOnline.com