போர்ட்லேண்ட்: பொங்கல் விழா
போர்ட்லேண்ட் மாநகரத் தமிழ்ச்சங்கம் பொங்கல்விழாவை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து 15 வருடங்கள் ஆனதை ஒட்டி 15 வகை உணவுகளைக் கொண்ட விருந்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

தமிழக கிராமத்துப் பொங்கலைக் கண்முன்னே கொண்டு வந்தனர்.

குடிசை வீட்டு முகப்பில் அழகியகோலம், மாடு, கோழி, கரும்பு, பொங்கல் பானை. அருகே ஒரு டீக்கடை வேறு! தமிழ் வார, மாத இதழ்கள் தொங்கின. காய்கறிகளில் அழகிய வேலைப்பாடுகள் செய்திருந்தனர்.

குழந்தைகளின் மாறுவேடப் போட்டியுடன் விழா தொடங்கியது. அடுத்து வந்த திருக்குறள், புறநானூறு போன்றவை ஒப்புவித்தல் போட்டியில் அழகான உச்சரிப்பு என்னைக் கவர்ந்தது. சியாட்டல் கிராமிய கலைக்குழு தமிழ்மொழியைப் பற்றிய அழகான வர்ணனையுடன் மேடை ஏறினர். முதலில் வந்த பறையாட்டத்தில் சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். அடுத்து சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் எல்லாம் சிறப்புற ஆடினர். கைதட்டல் வானைப் பிளந்தது.

தமிழ்மன்றப் பொங்கல்விழாவில் உங்கள் வீட்டுத் துளசிச்செடியை படம் எடுத்து அனுப்புங்கள் என்றனர். என் மாப்பிள்ளைக்குப் பரிசு கிடைத்ததில் ஒரே மகிழ்ச்சி. தமிழ் மன்றம் சமூகத்துக்குநன்மைசெய்ய 200 மரங்களை நட்டு வளர்ப்பது பாராட்டுக்குரியது. 20 தெருக்களைத் தத்தெடுத்து சுத்தம் செய்துள்ளது.

அடுத்து திரு. லியோனி தலைமையில் 'குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பெரிதும் தீர்மானிப்பது கனிந்த மனமா? நிறைந்தபணமா?' என்ற தலைப்பில் நடந்த நகைச்சுவை பட்டிமன்றம் விறுவிறுப்பாக இருந்தது.

அ.ப. மலர்க்கொடி பலராமன்,
போர்ட்லேண்ட்.

© TamilOnline.com