டொராண்டோவில் முஹம்மது அலி
மார்ச் 18, 2018 அன்று, தமிழ் இலக்கியத் தோட்டத்துடன் இணைந்து கனேடியத் தமிழ் வல்லுனர் குழுமமும், தலைமைத்துவம் மற்றும் கண்டுபிடிப்பு மையமும், டொராண்டோ ஜே.சி. விருந்து மண்டபத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இக்கூட்டத்தில் "தமிழ் குடிவரவாளர்களை கலாசார மூலதனத்தின் மூலம் மேம்படுத்துதல்" குறித்த வழிமுறைகள் ஆராயப்பட்டன. திரு. மனுவல் ஜேசுதாசன் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

உலகப் புகழ்பெற்ற, கானாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்கரான திரு. முஹம்மது அலி, தனது அமெரிக்கக் குடியேற்றத்தின் 30 வருட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள நியூ யார்க்கிலிருந்து முதன்மைப் பேச்சாளராக வந்திருந்தார். "குடிவரவாளர்களின் குழப்பம் - வந்தேறிய கலாச்சாரத்தைத் தன்வயப்படுத்துவதா, இல்லையா?" என்ற தலைப்பில் சிரிக்கவும், ஆழ்ந்து சிந்திக்கவும் வைத்த சிறப்புரை ஒன்றை ஆற்றினார்.

அவருக்கு முன்னர் உரையற்றிய டொராண்டோ பல்கலைக்கழக இறையியல் பேராசிரியர் சந்திரகாந்தன் "தமிழ் குடிவரவாளர்களின் மனிதம் மற்றும் நெறிமுறைகள் குறித்த முன்னோக்கு" என்ற தலைப்பின்கீழ் ஒரு விரிவான வரலாற்றுப் பார்வையை வழங்கினார். அடுத்து முனைவர் பட்ட மாணவியான திருமதி. நீட்ரா ரோட்ரிகோ "இயற்கையோடு இயைந்து வாழும் தமிழ் இலக்கியம்" என்ற தலைப்பின்கீழ் நாம் வாழும் திணை (நிலம்) குறித்து விரிவாக உரையாற்றினார்.

கடைசியாக நூலகம் அறக்கட்டளையின் தொழில்நுட்பத் துறை தலைவரான எல்.கே. நக்கீரன் "நினைவகம், அறிவு மற்றும் இலக்க முறை பாதுகாப்பு" என்ற தலைப்பில் நமது மொழியின் பொக்கிஷங்களை எக்காலத்துக்கும் பாதுகாத்து வைக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார். திரு. சிவன் இளங்கோ கூறிய நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

உஷா மதிவாணன்,
டொராண்டோ, கனடா

© TamilOnline.com