பொங்கல் கொண்டாட்டங்கள்: சிகாகோ தமிழ்ச் சங்கம்
ஜனவரி 27, 2018 அன்று, கின்ஸ்டேல் தெற்கு உயர்நிலைப் பள்ளியில் சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழாவை ஆட்டம், பாடல், நாடகம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் என்று குதூகலமாகக் கொண்டாடியது. நேப்பர்வில் மேயர் திரு. ஸ்டீவ் சிரிகோ நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்தார். கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்த பின்பு, தமிழ் தொழில்முனைவோரை சந்தித்துப் பேசினார்.

நிகழ்ச்சியின் முதல் பகுதியில் கவிதை, சலங்கை ஆட்டம், குச்சிபுடி நடனம், பறை ஆட்டம், மிமிக்ரி, குறுநாடகம் யாவும் இடம்பெற்றன. இரண்டாவது பகுதியில், சன்டிவி அசத்தப்போவது யாரு புகழ் திரு. கிறிஸ்டோபர் மற்றும் திரு சசி, நகைச்சுவை நிகழ்ச்சிகள் வழங்கினர். பொங்கல் விழாவில் வாழை இலையில் பொங்கல் விருந்து இல்லாமலா?

திரு. வ.ச. பாபு அவர்கள் தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும், ஆற்றிய தொண்டினைப் பாராட்டி, அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாக் குழுவினரான திரு. பிரசாத் ராஜாராமன், திருமதி. ஜெயஸ்ரீ ஐயர், திருமதி. தனுஜா நடேசா மற்றும் திரு. ராஜேஷ் சுந்தர்ராஜன் ஆகியோருடன் சங்கச் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து விழாவை வெற்றிகரமாக ஆக்கினர்.

பொங்கல் விழாக் குழு,
சிகாகோ தமிழ்ச் சங்கம்

© TamilOnline.com