கச்சேரி: அவினாஷ் ஆனந்த்
ஃபிப்ரவரி 24, 2018 அன்று SR ஃபைன் ஆர்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்த அவினாஷ் ஆனந்த் கச்சேரி சான் ஹோசேயில் உள்ள Community Of Infinite Spirit (Divine Science) அரங்கில் நடைபெற்றது. செல்வன் அவினாஷ், அமெரிக்காவிலும் , இந்தியாவிலும் பல கலைஞர்களுக்கு மிக சிறப்பாக மிருதங்கம் வாசித்து வருகிறார். அவர் வாய்ப்பாட்டிலும் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.

கல்யாணி அடதாள வர்ணத்தில் ஆரம்பித்து திருப்புகழில் முடிந்த விறுவிறுப்பான கச்சேரியில் தேர்ந்த சங்கீதத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களும் அடங்கியிருந்தன. நறுக்குத் தெறித்தாற்போல், அழகாகவும் அளவாகவும் இருந்த மத்யமாவதி ராக ஆலாபனையைத் தொடர்ந்தது சியாமா சாஸ்திரியின் "பாலிஞ்சு காமாக்ஷி பாவநீ". கடினமான ஸ்வர அமைப்புகளை எளிதாகப் பிரயோகப்படுத்திய விதம் அபாரம்.

அபூர்வா ஆனந்த் (வயலின்), ஸ்ரீகிருஷ்ணா ஷிவ்குமார் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசித்துக் கச்சேரிக்கு மேலும் மெருகேற்றினர்.

ஸ்ரீ பாதுகா அகாடெமியில் 6 வருடங்களாக இசை பயிலும் அவினாஷ், தனது இசையால் குரு ஹரி தேவநாத் மற்றும் விவேக் சுந்தரராமனை பெருமைப்படுத்தினார். பெற்றோர் வித்யா மற்றும் ஆனந்த் நன்றி கூறினர். விரிகுடாப் பகுதியில் கர்நாடக சங்கீத வளர்ச்சிக்கு 10 வருடங்களுக்கும் மேலாக பாதுகா அகாடமி நடத்திவரும் ஹரி மற்றும் விவேக்கின் பங்கு பாராட்டுக்குரியது.

மோகன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com