ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியும், இந்துமதத்தின் குறிப்பிடத் தக்க தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (83) காஞ்சிபுரத்தில் காலமானார். சுப்பிரமணியன் மகாதேவன் என்ற இயற்பெயர் கொண்ட ஜயேந்திரர், ஜூலை 18, 1935 நாளன்று பிறந்தார். 19ம் வயதில் மடத்தின் இளைய பீடாதிபதி பதவி ஏற்றார். 1994ல் அதன் 69வது பீடாதிபதி ஆனார்.

விசாலமான பார்வை கொண்டிருந்த இவர் சமய நல்லிணக்கத்திலும் சமுதாய நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஹிந்து மிஷன் மருத்துவமனை, ஸ்ரீ மாதா ட்ரஸ்ட், சைல்ட் ட்ரஸ்ட், காஞ்சி காமகோடி சங்கரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள், சேவை அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தார். வேத பாடசாலைகள், கல்விக்கூடங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் எனப் பலவற்றின் பின்னணியில் இருந்தவர். தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலய நுழைவுக்கு முன்னின்று உழைத்தார். பல்வேறு ஆலயப் பணிகளை முன்னெடுத்ததுடன் ஆலயங்கள் பலவற்றைப் புனரமைத்தவரும் கூட. ஸ்ரீரங்கம் அரங்கன் ராஜகோபுரம் எழுப்பப் பெரும் பங்காற்றினார். ஆன்மீக வாழ்வோடு பொதுவாழ்விலும் தீவிரமாக இயங்கினார்.

அயோத்திப் பிரச்சனை ஏற்பட்டபோது சமாதானம் ஏற்பட இவர் முன்னெடுத்த முயற்சிகள், மாற்றுமதத் தலைவர்கள் உட்படப் பலராலும் பாராட்டப்பட்டன. பல்வேறு சதஸ்களை நடத்தியவர். வேதமும் தமிழும் கலைகளும் வளர்ப்பதற்குப் பாடுபட்டார். முதுமையின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.



© TamilOnline.com