டாக்டர் வாசவன்
எழுத்தாளரும், அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பணியாற்றியவருமான வாசவன் (91) காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் இலுப்பைக்குடியில் 1927ம் ஆண்டு பிறந்த இவர், இளவயதிலேயே பத்திரிகை ஆர்வம் கொண்டிருந்தார். 'பாலமித்ரா' இதழில் ஆசிரியராக 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார். அதில் வெளியான 'நாராயணீயம்' தொடர் வாசவனுக்கு மிகுந்த புகழைத் தேடித் தந்தது. அதையே விரிவாக்கிச் செய்த ஆய்வுக்காக 'டாக்டர்' பட்டம் பெற்றார். பெரியவர்களுக்காகவும் நிறைய எழுதியிருக்கிறார். 300க்கும் மேற்பட்ட நாவல்களையும், 1000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 750க்கும் மேற்பட்ட அணிந்துரைகளையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 'நெல்லுச்சோறு' என்ற நாவலுக்காக தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை பொற்கிழி விருது, சங்கராச்சாரியார் வழங்கிய வியாச நாயகன் விருது, நற்கதை நம்பி விருது போன்றவற்றைப் பெற்றார். இவரது மனைவி முன்னரே காலமாகி விட்டார். செந்தில்குமார், யோகானந்த் என்ற இரண்டு மகன்களும், வள்ளி என்ற மகளும் உள்ளனர். (இவர் பற்றி மேலும் அறிய)



© TamilOnline.com