பாஸ்டன்: 'நாமருசி' பஜனைத் திருவிழா
2017 டிசம்பர் 30-31 தேதிகளில், அமெரிக்க ஞானானந்தர் சேவை சமாஜம் (GSS USA) நடத்திய 'நாமருசி' சம்பிரதாய பஜனைத் திருவிழாவில் -20 டிகிரி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பாஸ்டன்வாழ் இந்தியர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஆண்டோவரிலுள்ள சின்மயா மாருதி ஆலயத்தில் இந்தத் திருவிழா நடைபெற்றது.

'தென்னிந்திய சம்பிரதாய ஹரி ஹர பஜனை” என்பதான இந்த பஜனை முறையை 17-18ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் தஞ்சைப்பகுதியில் தோன்றிய பஜனை மும்மூர்த்திகளான போதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் மற்றும் மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் ஆகியோர் உருவாக்கினர். இதில் தமிழ் தவிரப் பல்வேறு இந்திய மொழிப் பாடல்களும் இடம்பெறும். இந்த முறைக்குப் புத்துயிர் ஊட்டிப் பரப்பியவர்களில் முக்கியமானவர் மறைந்த ஹரிதாஸ் கிரி சுவாமிகள்.

நாமருசி விழாவில் கம்பீரமாகப் பாடிய முன்னணி பாகவதர்களில் ஒருவரான சாக்ரமென்டோவைச் சேர்ந்த குருநாதன், ஹரிதாஸ் சுவாமிகளின் நேரடி மாணவர். தவிர நாகராஜ பாகவதர் (பஃபலோ), சந்தான பாகவதர் (பாஸ்டன்) உட்படப் பத்து மாநிலங்கள் மற்றும் கனடாவிலிருந்து வந்திருந்த பாகவதர்களுடன் பக்கவாத்தியக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

டிசம்பர் 30 அன்று குரு பாதுகை பூஜையுடன் துவங்கி, தோடைய மங்களம், குரு தியானம், சாது அபங்கம், அஷ்டபதி, உபசார கீர்த்தனைகள் என்று பல ராகங்களில் பலமொழிகளில் பாடி ஆடி பக்தர்களைப் பரவச நிலைக்கு அழைத்துச் சென்றனர். அன்று மாலை ஐந்துமுக விளக்கைச் சுற்றி நடனமாடும் தீபப்பிரதக்ஷிண நடனத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் யாவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தவிர, பிரபல நடனக்கலைஞர் ஸ்ரீதேவி திருமலையின் சிஷ்யைகளான இளைஞர்கள் அம்ருதா திருமலை மற்றும் ஸ்ரேயா ஸ்ரீனிவாஸ் பரதநாட்டியம் ஆடினர்.

டிசம்பர் 31ம் தேதி நாகராஜ பாகவதரின் உஞ்சவிருத்தியுடன் தொடங்கியது. அடுத்து நடந்தது ராதா கல்யாண நிகழ்ச்சி. நாரதர் கேட்ட ஒரு கேள்விக்கு “அன்பர்கள் எங்கு என்னை பக்தியுடன் புகழ்ந்து பாடுகிறார்களோ அங்கு நான் அவசியம் இருப்பேன்” என்று மகாவிஷ்ணு பதிலளித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இறைவனின் இனிய நாமங்கள் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்த நாமருசி விழாவில் அந்தப் பரந்தாமன் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

விழாவைப் பற்றி மேலும் அறிய:
https://goo.gl/XZqfMY, https://goo.gl/kuktMN

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
பாஸ்டன், மாசசூஸட்ஸ்

© TamilOnline.com