பாரதி தமிழ் கல்வி: பொங்கல் திருவிழா
ஜனவரி 21, 2018 அன்று கலிஃபோர்னியா மாநிலம் செரிட்டோஸ் நகரில் இயங்கிவரும் பாரதி தமிழ் கல்வி பொங்கல் திருவிழா கொண்டாடியது.

நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தென் கலிஃபோர்னியா வாழ் தமிழ்மக்கள் ஜான் அ. கொன்சால்வஸ் ஆரம்பப்பள்ளி பல்முனை உள்ளரங்கில் குழுமினர். மங்கல இசை, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. பள்ளி முதல்வர் திரு. பாபநாச வீரபாகு வரவேற்றுப் பேசினார். மாணவர்கள் வழங்கிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் என்னும் விளக்கம், தமிழ் மன்னர்கள், தமிழ்ப் பாரம்பரியம், தமிழ் நூல்கள், தமிழ்க் கவிஞர்கள் மற்றும் கிராமிய நடனங்கள் பற்றிய பேச்சுக்களும் மிகச்சிறப்பாக இருந்தன. இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான இலக்கியங்களைமேற்கோள் காட்டிப் பேசியது வியக்க வைத்தது.

காக்கை சிறகினிலே, தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாடல்களைப் பாடி அசத்தினர். மழலையர் பாரதி பாடல்களைக் கொஞ்சு தமிழில் பாரதியாய் வேடமிட்டு வந்து பாடி மகிழ்வித்தனர்.

உழவு மற்றும் உழவர்களைப் போற்றும் பாடலுக்கு ஆடினர். வில்லுப்பாட்டில் தமிழ் தெய்வங்களைப் பற்றி பாடிய ஆசிரியர்கள் மற்றும் மேல்வகுப்பு மாணவர்களைப் பாராட்ட வார்த்தையில்லை.

கரகாட்டம், காவடியாட்டம், கும்மி, சிலம்பாட்டம் எல்லாம் பிரமாதம்.

அம்மாக்கள் கிராமிய உடை அணிந்து நாட்டுப்புறப் பாடலுக்கு ஆடி அரங்கத்தை அதிர வைத்தனர். அப்பாக்கள் சும்மா இருப்பார்களா, 'ஒரே கல்லுல மூணு' மாங்கா என்ற நகைச்சுவை நாடகத்தில் செல்ஃபோனின் தாக்கத்தைச் சொல்லி சிந்திக்கவைத்தனர். சிவாஜி பேசிய வசனத்தை அதே ஏற்ற இறக்கங்களுடன் பேசியது மட்டுமல்லாமல், மெல்லிசை பாடி மெய்மறக்கச் செய்தனர்.

கரும்புகளுடன் பொங்கல் பானை வைத்து, அரங்கத்தை அலங்கரித்து நிகழ்சிகளை வழங்கினர். உதவித் தலைமையாசிரியர் திரு. செந்தில் கருப்பையா நன்றி கூறினார்.

மேலும் அறிய: barathithamizh.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com