சென்னையில் TNF ஆண்டுவிழா
டிசம்பர் 7, 2017 அன்று தமிழ் நாடு அறக்கட்டளை தனது ஆண்டு விழாவை சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் ஹோட்டல் சவேராவில் கொண்டாடியது. தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கல்வித்துறையுடன் இணைந்து அறக்கட்டளை நடத்திவரும் கல்வித்திட்டங்களை விளக்கியது.

2018ம் ஆண்டில் செயல்படுத்தப் போகும் கீழ்க்கண்ட 3 திட்டங்களை அறிமுகப்படுத்தியது: முதலாவது திட்டத்தில், சென்னை அரசுப் பள்ளிகளில் உளவியல் சமூக ஆதரவு, வாழ்க்கைத்திறன் கல்வி, ஆங்கிலப் பயிற்சி, பள்ளி நூலகப் பயன்பாடு மேம்படுத்துதல், வளரிளம் பெண்களுக்கான சுகாதாரம், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சிகள், கல்லூரிகளைப் பார்வையிடுதல், டிஜிட்டல் பயிற்சி, வாழ்க்கை வழிகாட்டல் போன்ற பணிகள் நிபுணர்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும். இரண்டாவது, பாம்புக்கடியினால், கிராமப்புற மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சென்னை முதலைப்பண்ணை அறக்கட்டளையுடன் இணைந்து விழிப்புணர்வு திட்டம். மூன்றாவது, சென்னையில் TREC-STEP உடன் இணைந்து இளம் தொழில்முனைவோருக்கான தொழில்நுட்ப மையம்.

கத்தோலிக்க சிரியன் வங்கியின் தலைவர் T.S. அனந்தராமன், அறக்கட்டளையின் கையேட்டை வெளியிட்டு உரையாற்றினார். அறக்கட்டளைத் தலைவர் திரு.s. ராஜரெத்தினம் (IAS-Retd) தலைமையுரை ஆற்றினார். ஹாட்பிரெட் தலைவர் திரு. மகாதேவன் முத்தாலம்பெட், பட்டி மன்றம் புகழ் பாரதி பாஸ்கர், அமெரிக்க TNF தலைவர் சோமலெ சோமசுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னதாக, அறங்காவலர் திரு.V. நாகப்பன் வரவேற்புரை வழங்கினார். திரு s. சிவக்குமார் நன்றியுரை வழங்க இனிதே நடைபெற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com