அரங்கேற்றம்: ஸ்ருதி ஸ்ரீதர்
ஆகஸ்ட் 19, 2017 அன்று சிகாகோ சுவாமி நாராயண் ஆலயத்தில், நெய்வேலி திரு. சந்தான கோபாலனின் சிஷ்யை செல்வி. ஸ்ருதி ஸ்ரீதரின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் நடந்தது. சந்தான கோபாலன் "நெய்வேலி சிஷ்யகுலம்" என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஸ்ருதிக்கு "சங்கீத யுகவாணி" என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.
டாக்டர் சுப்ரமண்யம் ராமமூர்த்தி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.


கானடா ராக வர்ணத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கௌளையில் "மகா கணபதிம்", பூர்விகல்யாணியில் நீலகண்ட சிவனின் "ஆனந்த நடமாடுவார்" பாடிய பின், தீக்ஷிதர் கிருதிக்கு பைரவ ராக ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரம் விரிவாகச் செய்தார். "பால கோபால" மற்றும் ஹிந்தோளத்தில் ராகம்-தானம்-பல்லவி அழகாகப் பாடினார். ஸ்ரீரஞ்சனி, ஹரிகாம்போதி, லலித பஞ்சமம், தர்பாரி கனடா போன்ற ராகங்களில் பாடினார். இறுதியில் நெய்வேலி சந்தானகோபாலன் இயற்றிய பிந்துமாலினி ராகத் தில்லானாவைப் பாடி, அவையோரின் பாராட்டுதல்களுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஸ்ருதி.

பக்கம் வாசித்த முரளி (வயலின்), எத்திராஜ் (மிருதங்கம்), சமர்த்தராவ் (கஞ்சிரா) ஆகியோரின் பங்களிப்பு நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. பல பிரமுகர்கள் கலந்துகொண்டு ஸ்ருதியையும், நிகழ்ச்சியையும் பாராட்டிப் பேசினர்.

தங்கம் ராமசாமி,
நியூ ஜெர்சி

© TamilOnline.com