எம்.ஜி. சுரேஷ்
தமிழின் மிகச்சிறந்த கோட்பாட்டு எழுத்தாளரும், பின்நவீனத்துவத்தைப் பரவலாக அறியச் செய்தவருமான எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷ் சிங்கப்பூரில் காலமானார். 1953ல் மதுரையில் பிறந்த இவர், எழுத்துப் பயணத்தைக் கவிதையில் துவங்கினார். பின்னர் சிறுகதை, கட்டுரை, நாவல், விமர்சனம் என்று ஆர்வங்கள் விரிந்தன. உலக இலக்கியங்களின் மீதும், இலக்கியக் கோட்பாடுகளின் மீதும் கொண்ட ஆர்வத்தால் அதுபற்றிய கட்டுரைகளை இதழ்களில் எழுதத் துவங்கினார். குறிப்பாக போஸ்ட் மார்டனிஸம் எனப்படும் பின் நவீனத்துவக் கோட்பாடுகள் பற்றி மிக விரிவாக, விளக்கமாகத் தமிழில் எழுதியவர் சுரேஷ்தான். "இரண்டாவது உலகைத் தேடி" என்பது இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்பாகும். "கனவுலகவாசியின் நனவுக் குறிப்புகள்", "அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்", "அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்", "சிலந்தி", "யுரேகா என்றொரு நகரம்", "37" போன்றவை இவரது முக்கியமான நாவல்களாகும். கோட்பாடுகளைப் பற்றி இவர் எழுதிய "இஸங்கள் ஆயிரம்" என்ற நூலும் முக்கியமானதாகும். எழுத்துக்காகப் பல்வேறு விருதுகளும், பாராட்டுக்களும் பெற்றிருக்கும் சுரேஷ், சின்னத்திரை, சினிமா போன்றவற்றிலும் பங்காற்றியுள்ளார். (மேலுமறியப் பார்க்க: ஜூன், 2010 இதழ்,) சிங்கப்பூரில் மகள் வீட்டில் காலமானார்.



© TamilOnline.com