சிகாகோ ராமர் கோவிலில் நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி
ஏப்ரல் 1, 2007 அன்று, சிகாகோ ராமர் கோவிலில் ஸ்ரீமதி நித்யஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. கணபதி வந்தனம் செய்த போதே கச்சேரி களை கட்டிவிட்டது. மலையமாருதத்தில் அவர் பாடிய பாடல் மிக அருமை. பேகடாவில் ராக ஆலாபனையைத் தொடர்ந்து வந்த 'முருகா' வடிவழகனை வா வா என்று அழைத்தது. நீலாயதாட்சியை தீட்சிதர் பூஜிக்கும் பாடல் அம்மனைக் கண்முன் நிறுத்தியது. தியாகராஜரின் அரிய கிருதியான 'வாராமகோ'வை கைகவசி ராகத்தில் மிக அருமையாகப் பாடினார் நித்யஸ்ரீ. அடுத்து சுபபந்துவராளியை எடுத்துக் கொண்டு மிக நீண்ட ராக ஆலாபனை செய்தார். இணையாக ஸ்ரீகாந்த் வெங்கட்ராமன் அளவாக, அழகாக வயலின் வாசித்து கச்சேரிக்கு மெருகூட்டினார்.

'பாரத சமுதாயம்' பாடும்போது 'முப்பது கோடி ஜனங்களின்' என்ற வரிகள் வந்ததும், அதைக்கூட்டிக் கொண்டே போய் 40 கோடி, 50 கோடி என்று 100 கோடியில் வந்து முடித்தபோது எழுந்த கரவொலி இந்தியாவில் 110 கோடி ஜனங்களுக்கும் கேட்டிருக்கும். 'புல்லாய் பிறந்தாலும்' விருத்தம் உள்ளத்தை தொட்டது. அதில் 'எத்தனை தந்தையர் எத்தனை தாய்' என்ற வரிகள் வந்தபோது, தந்தை சிவகுமார் ஈஸ்வரனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டது மிகவும் பொருத்தம். அருமையான கச்சேரிக்கு அழகாக மிருதங்கம் வாசித்தார் சிவகுமார்.

நித்யஸ்ரீயின் தாயார் லலிதா சிவகுமாரின் சாயி பஜன் ரசிகர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது. தனது பாட்டி திருமதி டி.கே. பட்டமாளின் 82-வது பிறந்தநாள் சில தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்டதைக் கூறி, தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் நித்யஸ்ரீ. மூன்றரை மணி நேரத்திற்குப் பின் கச்சேரி முடிந்த போது, எழுந்து நின்று கரவொலி செய்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் சபையோர்.

இந்தக் கச்சேரியை கணேச காயத்ரி கோவில் குழுவினர் ஏற்பாடு செய்திருந் தார்கள். அவர்கள் நித்யஸ்ரீக்கு 'சங்கீத ஸ்வராஜி' என்ற பட்டம் அளித்தார்கள். இக்கோவில் மந்திரம், வேதம், புராணக் கதைகள் முதலியவற்றைச் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் போதிக்கும் கல்விக் கூடமாகவும் பணிபுரிந்து வருகிறது. தற்போது கும்பாபிஷேகத்திற்குத் தயாராகி வருகிறது. ஆலய வளர்ச்சிக்கு உதவ விரும்புவோர் நிதியளிக்கவும் தொடர்பு கொள்ளவும்: www.ggtemple.org

அலுமேலு மணி

© TamilOnline.com