புத்தகம், குறுந்தகடு வெளியீடு: ஓர் இசைக்கலைஞரின் நினைவலைகள்
ஏப்ரல் 7, 2007 அன்று கிளீவ்லாண்டில் நடைபெற்ற 30ஆவது தியாகராஜ ஆராதனை விழாவில் சங்கீத கலா சாகரம் பேராசிரியர் மைசூர் வி. ராமரத்னம் அவர்கள் எழுதிய 'A Musician’s Reminiscences' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சங்கீத கலாநிதி டி.கே. கோவிந்தராவ், சுதா ரகுநாதன், டி.எம். கிருஷ்ணா போன்ற பல கலைஞர்களின் ஒலிப்பேழைகள், குறுந்தகடுகள், புத்தகங்கள் போன்றவையும் நிகழ்ச்சியில் வெளியிடப் பட்டன. க்ளீவ்லாண்ட் சுந்தரம் அவர்கள் பேராசிரியர் ராமரத்னத்தின் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார்.

'பேராசிரியர் ராமரத்னம் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்திய நாத பாகவதர், மைசூர் வாசுதேவாச்சார் போன்றவர்களைப் போல ஆழமான இசை ஞானம் உடையவர். அளவற்ற அனுபவ அறிவு கொண்டவர். அவர் இந்தப் புத்தகத்தை எழுத முன் வந்ததற்கு நம் அனைவரின் நன்றி உரித்தாகட்டும். இசைக்கலைஞராக அவரது அனுபவங்களை மட்டுமல்லாமல், சிறந்த அந்த இசை மேதைகளைப் பற்றியும், அவர்களிடமிருந்து அவர் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பற்றியும் இந்தப் புத்தகம் சிறப்பாக விளக்கியிருக்கிறது' என்று அவர் கூறினார்.

பேராசிரியர் ராமரத்னம் அவர்களின் இசை மேதைமையை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசு அண்மையில் அவருக்கு 'கனக புரந்தரா' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இசைக் கலைஞர்களுக்கு அரசு அளிக்கும் விருதுகளிலேயே அது மிக உயர்ந்த ஒன்று என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். அதன் மூலம் கிடைத்த 100,000 ரூபாயை அவர் சமூக சேவை நிறுவனங் களுக்குக் கொடுத்து விடுவதாகக் கூறியிருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

புத்தகத்தோடு, பேராசிரியர் ராமரத்னம் அவர்களின் இசை நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்ட குறுந்தகடும் இணைக்கப் பட்டுள்ளது. அவை மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமதி நந்தினி மௌலி (பால்டிமோர், மேரிலாண்ட்) முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ள, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

ஸ்ரீனிவாசன்

© TamilOnline.com